Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

திடீர் புளியோதரை போல் திடீர் துணை முதல்வர்... தமிழகத்தில் ரத்த ஆறு... ஆர்.பி உதயகுமார் பேச்சு!

By nishika
21 Sep 2024, 12:35 AM
உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கினால் தமிழகத்தில் பாலாறும், தேனாறுமா ஓடப்போகிறது? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள கிராமங்களில் பல்வேறு திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ 

கப்பலூர் சுங்கச்சாவடி விதியை மீறி புறம்பாக வைக்கப்பட்டுள்ளது. இது அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் போராடி வருகிறார்கள், இதே எடப்பாடியார் ஆட்சியில் உள்ளூர் மக்களுக்கு முழு கட்டணவிலக்கு அளிக்கப்பட்டது. தற்பொழுது மக்கள் அதைத்தான் கேட்கிறார்கள் புதிய சலுகை எதுவும் கேட்கவில்லை. தற்பொழுது தமிழகத்தில் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதன் மூலம் ஒரு பகல் கொள்ளையை அரசு செய்து வருகிறது. தற்போது காலாவதியான சுங்கச்சாவடிவுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக இது போன்ற சுங்கச்சாவடி அமைக்கும் முன்பு அந்த சாலைகள் அமைக்கும் செலவுகளை ஈடுகெட்ட வசூல் செய்வார்கள். அதன்  மதிப்பு முடிந்த பின்பு டோல்கேட் எடுக்கப்பட வேண்டும். ஆனால் இதற்கு குரல் கொடுக்காமல் மாநில அரசு வேடிக்கை பார்க்கின்றது. சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும், அதே போல் 17 சதவீத கூடுதல் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஆனால் மத்திய, மாநில அரசுகள் ஒருவருக்கு  ஓருவர் மீது குற்றம் சுமத்த கூடாது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கப்பலூர் சுங்கச்சாவடிக்கு விதிமுறை அமைக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற  வேண்டும் என்று எடப்பாடியார் ஆணைக்கிணங்க மாபெரும் போராட்டம் நடைபெற்றது. தற்போது கூட இஸ்லாமிய சகோதரர்கள் போராடினார்கள். அவர்களை கைது செய்துள்ளனர். இது பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. இது உரிமை நிலைநாட்டும் உரிய போராட்டம். உள்ளூர் வாகனங்களுக்கு மீண்டும் கட்டணம் வசூலித்தால் எடப்பாடியாரின் ஆணையைபெற்று மிகப்பெரிய அளவில் நாங்கள் போராட்டத்தை செய்வோம். மக்கள் பிரச்சனையை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. ஆனால் உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற கவனத்தில்தான் உள்ளனர். இன்றைக்கோ, நாளைக்கோ அறிவிப்பு வந்துவிடும் என்று தொடர் நாடகத்தை அரசு அரங்கேற்றி வருகிறது.

உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கினால் தமிழகத்தில் பாலாறும், தேனாறுமா ஓடப்போகிறது, தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாளே இல்லை. அதனால் ரத்த ஆறுதான் ஓடும். உதயநிதி துணை முதலமைச்சரானால் நீட்தேர்வை ரத்து செய்து விடுவாரா? எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கலை காட்டியவர் நிதியை கொண்டு வந்து விடுவாரா? கட்சித்தீவு நமது பிறப்புரிமை. உதயநிதி கச்ச தீவை மீட்டுவிடுவரா? இல்லை மின்சார வரி, குப்பை வரி, சொத்து வரி இவற்றையெல்லாம் குறைத்து விடுவாரா? தற்போது வெளிநாட்டு முதலீட்டை பெற்று விட்டோம் என்று முதலமைச்சர் கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் நடக்கும் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எப்படி வெளிநாடு முதலீடு தமிழகத்திற்கு வரும்? 

மேலும் படிக்க: விஜய் செய்வது கொஞ்சமாவது நியாயமா இருக்கா? தமிழிசை சரமாரி கேள்வி

வெளிநாட்டு முதலீட்டிற்கு வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று கூறினோம். அது மரபு இல்லை என்று முதலமைச்சர் பதில் கூறுகிறார். திடீர் புளியோதரை, திடீர் தயிர்சாதம் மாதிரி திடீர் சட்டமன்ற உறுப்பினர், திடீர் அமைச்சர், திடீர் துணை முதலமைச்சர் என்று உருவாக்கியது எந்த மரபு என்று தெரியவில்லை. அதேபோல் ஏழை, எளிய குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டை தற்பொழுது கடைகளில் ஆம்லெட் போட்டு விற்கிறார்கள். அரசு முற்றிலுமாக சீரழிந்து விட்டது” என்று தெரிவித்தார்.