அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், வரும் 5-ஆம் தேதி மனம் திறந்து பேச இருப்பதாகவும் தனது முடிவை அப்போது அறிவிப்பதாகக் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையன் - இ.பி.எஸ். இடையேயான கருத்து வேறுபாடு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் செங்கோட்டையன் முக்கிய இடம் வகித்தார். ஆனால், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன. இதற்கு முதல் சான்றாக, பிப்ரவரி 9-ஆம் தேதி கோவையில் நடைபெற்ற அத்திக்கடவு - அவினாசி திட்ட பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது பார்க்கப்பட்டது. விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இல்லாததுதான் புறக்கணிப்புக்குக் முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என செங்கோட்டையன் பல மேடைகளில் மறைமுகமாகப் பேசி வந்தார். இதன்பின்னர், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தபோதும், கட்சி சார்ந்து அவர் பெருமளவில் கருத்து தெரிவிக்கவில்லை. சமீபத்தில், எடப்பாடி பழனிசாமி கோபி பகுதியில் பிரச்சார பயணம் மேற்கொண்டபோது, செங்கோட்டையன் அவருக்கு வரவேற்பு கூட அளிக்கவில்லை. இது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
'மனம் திறந்து பேசுவேன்'
இந்த நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று (செப்.2) ஆதரவாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வரும் 5-ஆம் தேதி காலை 9 மணியளவில் கோபிசெட்டிபாளையம் அதிமுக அலுவலகத்தில் எனது மனம் திறந்து பேசவுள்ளேன். அப்போது அனைத்து முடிவையும் அறிவிக்கிறேன். அதுவரை அனைவரும் காத்திருங்கள்” எனக் கூறினார்.
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
செங்கோட்டையனின் இந்த திடீர் அறிவிப்பு, அதிமுகவில் அடுத்தகட்ட குழப்பத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அதிமுகவில் இருந்து விலகி தனக்கென தனி அணி உருவாக்குவாரா? அல்லது வேறு கட்சியில் இணைவாரா? என பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன.