Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

செங்கோட்டையன் பதவி பறிப்பு..எடப்பாடி பழனிசாமி அதிரடி.. அதிமுகவில் உச்சக்கட்ட மோதல்!

By VASUKI
06 Sep 2025, 12:23 PM
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கப் பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த நிலையில், அதிமுக பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாகப் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்குள் ஒற்றுமையை வலியுறுத்திய இவரது பேச்சுக்கு உடனடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது, அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒருங்கிணைந்து வர, எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதிப்பதாகத் தெரிவித்தார். “அதிமுகவில் ஒரே மனப்பான்மையுடன் உள்ளவர்கள் ஒருங்கிணைந்து, பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபடுவார்கள்” என்று அவர் மறைமுகமாக எச்சரித்திருந்தார்.

செங்கோட்டையனின் இந்த அறிக்கை கட்சித் தலைமைக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, திண்டுக்கல்லில் அதிமுக நிர்வாகிகளுடன் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, இன்று செங்கோட்டையன் வகித்து வந்த அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய முக்கியப் பதவிகளிலிருந்து அவர் விடுவிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக அறிவித்தார். இது, கட்சித் தலைமைக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பார்க்கப்படுகிறது. இந்தப் பரபரப்பான நடவடிக்கை, அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.