Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

"மகளிருக்கு மாதம் ரூ.2,500; 6 இலவச சிலிண்டர்"- விஜய் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

By Christon
07 Mar 2026, 05:49 PM
மகளிருக்காக விஜய் வெளியிட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்..
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு விழாவில், அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றினார். பெண் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய அவர், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் மகளிருக்காகச் செயல்படுத்தப்படவுள்ள அதிரடித் திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டார்.

பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் நலன்களைக் காக்கத் தனி இலாகா உருவாக்கப்படும் என்று தனது உரையைத் தொடங்கிய விஜய், குடும்பத் தலைவிகளுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். 60 வயது வரையிலான அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,500 உதவித்தொகை மற்றும் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

கல்வி மற்றும் திருமண உதவிகள்

பெண்களின் திருமணத்தின் போது, 'தாய் வீட்டு அண்ணன் சீர்' எனும் பெயரில் ஒரு பவுன் தங்கம் மற்றும் தரமான பட்டுச் சேலை வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை அவர் அறிவித்தார். மேலும், பள்ளிப் படிப்பில் மாணவிகளின் இடைநிற்றலைத் தவிர்க்க, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளின் தாய்மார்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 நிதியுதவி வழங்கப்படும் என்றார். அரசுப் பேருந்துகளில் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் கட்டணமின்றிப் பயணிக்கும் வசதி தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 'ராணி வேலுநாச்சியார் படை' என்ற பிரத்யேகப் பிரிவு ஏற்படுத்தப்படும் என்றும், அத்தகைய குற்றங்களை விரைந்து விசாரிக்க 'அஞ்சலை அம்மாள் விரைவு நீதிமன்றங்கள்' அமைக்கப்படும் என்றும் விஜய் தெரிவித்தார். பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக 'ஸ்மார்ட் பேனிக் பட்டன்' (Smart Panic Button) வசதி மற்றும் அனைத்துப் பெண்களுக்கும் விலையில்லா சானிடரி நாப்கின்கள் வழங்கப்படும் என்பன போன்ற பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் திட்டங்களையும் அவர் முன்மொழிந்தார்.

பொருளாதார மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலம்

மகளிர் சுயஉதவிக் குழுக்களின் வளர்ச்சிக்காக 'சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்' மூலம் ரூ.5 லட்சம் வரை 100 சதவீத மானியம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். விழாவின் முத்தாய்ப்பாக, தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.