Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

தவெக அரசியல் கட்சி அல்ல.. லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம்.. பிரசாந்த் கிஷோர்

By nagalekshmi
26 Feb 2025, 05:59 PM
தமிழக வெற்றிக் கழகம் வெறும் அரசியல் கட்சி அல்ல, இது லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டத்தை எதிர்க்கும் வகையில் தவெக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் அக்கட்சியின் தலைவர் விஜய் கையெழுத்திட்டு கெட்-அவுட் இயக்கத்தை தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து விழாவில் பேசிய தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெறும் தலைவர் அல்ல, தமிழகத்தின் நம்பிக்கை. தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் காரணமாக இருக்க முடியாது. தங்களின் வெற்றிக்கு தாங்கள் செய்யும் பணியே காரணம் இருக்கும்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் வியூகப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். தவெகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக நான் இங்கு வரவில்லை. அவர்களுக்கு என் வியூகமும் தேவையில்லை. தவெக அரசியல் கட்சி அல்ல, இது லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம். 35 ஆண்டு கால அரசியலில் புதிய மாற்றத்தை விஜய் ஏற்படுத்தவுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் அரசியல் ஊழல் வேறெங்கும் கண்டதில்லை. இதனை சரிசெய்ய வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக, புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டத்தை எதிர்க்கும் வகையில்   தவெக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் அக்கட்சியின் தலைவர் விஜய் கையெழுத்திட்டு கெட்-அவுட் இயக்கத்தை தொடங்கி வைத்தார். விஜய்யைத் தொடர்ந்து get out பேனரில் கையெழுத்திட்ட என். ஆனந்த், அதன் பின்னர் பிரசாந்த் கிஷோரை கையெழுத்து போட அழைத்தார். 

ஆனால், அவர் வேண்டாம் என்று சைகை காட்டியபடி மறுத்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல், அவர் கையெழுத்து போட மறுத்தது ஏன் என்ற விவாதமும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.