அரசியல்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் காவல்துறை.. சென்னையில் பரபரப்பு!

By Christon
20 Jun 2026, 11:16 AM
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு கரூர் போலீசார் வந்து தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.
கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கை போலீஸார் தேடி வரும் நிலையில், சென்னைக்கு வந்துள்ள கரூர் தனிப்படை போலீஸார் தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

கரூரில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கைத் தேடிய போலீஸாருக்கு அவர் அங்கு கிடைக்காததால், தனிப்படை போலீஸார் சென்னைக்கு விரைந்துள்ளனர். ஏடிஎஸ்பி தலைமையிலான போலீஸ் படையினர், சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள செந்தில் பாலாஜியின் இல்லத்திற்கு நேரடியாக வந்து அதிரடித் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருப்பினும், எந்த வழக்கில் அசோக்கை போலீஸார் தேடி வருகிறார்கள் என்ற விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாததால், அரசியல் வட்டாரத்தில் பெரும் மர்மமும் பரபரப்பும் நீடித்து வருகிறது.

முன்னதாக, சென்னை ஆர்.ஏ புரம் கஸ்தூரி நகர் பகுதியில் அசோக் முன்பு தங்கியிருந்ததாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் கரூர் போலீஸார் அங்கு சென்று சோதனையிட முயன்றனர். ஆனால், அங்கு செந்தில் பாலாஜியின் சகோதரர் தங்கியிருந்த வீடுகள் ஏற்கனவே காலி செய்யப்பட்டுவிட்டதாகத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட தனிப்படை போலீஸார், அவர் தங்குவதற்கு வாய்ப்புள்ள பிற இடங்களைக் கண்டறிந்து தங்களது தீவிர விசாரணையையும் தேடுதல் நடவடிக்கையையும் முடுக்கிவிட்டுள்ளனர்.