அரசியல்

ஜி.கே. மணி மகன் காங்கிரஸில் ஐக்கியம்: தேர்தலில் போட்டி?

By Christon
28 Mar 2026, 03:29 PM
பாமகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பாமகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் காங்கிரஸில் இணைந்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் நம்பிக்கைக்குரியவராகவும், அக்கட்சியின் இளைஞரணித் தலைவராகவும் இருந்து வந்தவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன். இவர் பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ ஜி.கே.மணியின் மகன் ஆவார். இந்நிலையில், அவர் பாமகவிலிருந்து விலகி டெல்லியில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் இன்று முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

தந்தையின் தொகுதியில் போட்டி?

தற்போது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக ஜி.கே.மணி இருந்து வருகிறார். இந்நிலையில், அதே பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு தமிழ்க்குமரன் காங்கிரஸ் தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குப் பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்பட்டால், தமிழ்க்குமரன் அங்கு வேட்பாளராகக் களம் இறங்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசியல் பரபரப்பு

பாமகவில் அண்மைக் காலமாக நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தலைமை மாற்றங்கள் காரணமாகத் தமிழ்க்குமரன் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தந்தை ஒரு கட்சியிலும், மகன் மற்றொரு கட்சியிலும் இருக்கும் சூழல் உருவாகியுள்ளதால், பென்னாகரம் தொகுதித் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாகத் தமிழ்க்குமரன் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் என்பதால், அவரது வருகை இளைஞர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.