Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம்.. ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

By Christon
25 Oct 2025, 02:26 PM
பாமகவின் செயல் தலைவராகத் தனது மூத்த மகள் காந்திமதியை நியமிப்பதாகக் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராகத் தனது மூத்த மகள் காந்திமதியை நியமிப்பதாகக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது, கட்சியின் செயல் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ள முக்கிய மாற்றமாகும்.

அன்புமணி நீக்கத்தின் பின்னணி

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கருத்து மோதல் நிலவி வந்தது. ராமதாஸின் எதிர்ப்பையும் மீறி அன்புமணி பல கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதுகுறித்து அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் பதிலளிக்காததால், அன்புமணி ராமதாஸை கட்சியில் இருந்து நீக்கி அவர் வகித்து வந்த செயல் தலைவர் பதவியில் இருந்தும் நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார்.

புதிய செயல் தலைவர் நியமனம்

இந்தச் சூழலில், தருமபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராமதாஸ், கட்சியின் புதிய செயல் தலைவராகத் தனது மூத்த மகள் காந்திமதியை நியமிப்பதாக அறிவித்தார்.

அவர் பேசுகையில், "செயல் தலைவர் என்ற பொறுப்பை உருவாக்கினேன். அதனை ஒருவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எனவே, அப்பொறுப்பை பெரிய மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்குகிறேன். காந்திமதி கட்சியையும் வளர்ப்பார், எனக்கும் பாதுகாப்பாக இருப்பார்" என்று தெரிவித்தார்.

பாமகவில் ஏற்பட்ட இந்த அதிரடி அரசியல் மாற்றம், கட்சிக்குள் மேலும் பல சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.