Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

பாமக பெயர், சின்னம் விவகாரம்: ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல்!

By Christon
10 Sep 2025, 12:22 PM
பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை தொடர்பாக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை தொடர்பாக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவற்றில் கேவியட் மனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பாமகவில் தந்தை - மகன் மோதல்

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில், ராமதாஸ் தனது பேரன் முகுந்தனை இளைஞர் பிரிவு தலைவராக அறிவித்தார். இதற்கு அன்புமணி ஆட்சேபனை தெரிவித்ததில் இருந்து இருவருக்கும் இடையே மோதல் தொடங்கியது. இதன்பிறகு, ராமதாஸ் தன்னை கட்சியின் தலைவராக அறிவித்ததோடு, தன் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவித்தார். மேலும், இருதரப்பிலிருந்தும் பழைய நிர்வாகிகள் நீக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

நீதிமன்ற நடவடிக்கை

கடந்த ஆகஸ்ட் மாதம் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி, ராமதாஸால் நியமிக்கப்பட்ட பொதுச் செயலாளர் முரளி சங்கர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கூட்டத்திற்குத் தடை இல்லை என உத்தரவிட்டது.

இந்த நிலையில், முரளி சங்கர் தற்போது சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் கேவியட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்களில், தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி தரப்பு, கட்சியின் உரிமைக்கோரி அல்லது மாம்பழம் சின்னத்தை பெற நீதிமன்றத்தை அணுகினால், தங்கள் தரப்பை விசாரிக்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.