Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

கரூர் துயரம்: "என்னை மன்னித்து விடுங்கள்"- பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்ட விஜய்!

By Christon
27 Oct 2025, 05:01 PM
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை நடிகர் விஜய் இன்று மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நிவாரண உதவிகள் வழங்கிய விஜய்

கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிற்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது.

மாமல்லபுரத்தில் உருக்கமான சந்திப்பு

சட்டச்சிக்கல்கள் மற்றும் அனுமதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார்.

இதையடுத்து, விஜயின் கட்சி நிர்வாகிகள் ஏற்பாட்டில், நேற்று இரவில் அவர்கள் மாமல்லபுரம் வந்தடைந்தனர். இன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் தனித்தனியாகச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்ட விஜய்

மாமல்லபுரத்துக்கு வரவழைக்கப்பட்ட 41 பேரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்த தவெக தலைவர் விஜய் மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார். அப்போது அவர், கண்ணீர் மல்க அவர்களிடம் தன்னை மன்னித்து விடுமாறு கோரியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் பேசியதாக வெளியான தகவல்

"உங்களை மாமல்லபுரம் அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். நிச்சயம் உங்களைச் சந்திக்க கரூர் வருவேன். வாழ்நாள் முழுவதும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன். உங்களுக்கு என்ன உதவிகள் தேவை என்றாலும் நான் செய்து தருவேன்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பு, திருமணம், கல்விச் செலவு என அனைத்தையும் தான் ஏற்றுக்கொள்வதாக விஜய் உறுதி அளித்துள்ளார்.

கரூர் வந்து சந்திக்க இயலாமைக்கு, அங்கு மண்டபம் கிடைக்காததுதான் காரணம் என்றும் விஜய் அவர்களிடம் விளக்கம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.