Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்...தவெக தலைவர் விஜய்

By Jayakumar
21 Apr 2025, 07:56 PM
என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
விஜய் நேரில் ஆறுதல்

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் 1000 நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதிதாக அமைய உள்ள விமான நிலையத்தால் விளை நிலங்கள், ஏரிகள், கிராமங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், இயக்கங்கள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விமான நிலைய எதிர்ப்பு குழுவினரையும், கிராம மக்களையும் தவெக தலைவர் விஜய் சமீபத்தில் நேரில் ஆதரவு தெரிவித்தார்.கட்சிக்கொடி பொருத்திய பிரச்சார வாகனத்தில் விஜய் பரந்தூர் சென்றார். பரந்தூர் செல்லும் வழியில் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நம்பிக்கையோடு இருங்கள்

அப்போது தொண்டர்கள் வீசிய தவெக துண்டை கழுத்தில் அணிந்திருந்த விஜய் பரந்தூர் சென்றதும், விவசாயிகள் கொடுத்த பச்சை துண்டை அணிந்துக்கொண்டார். மேலும் அங்குள்ள விவசாயிகள், விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு, கிராம மக்கள் என சிலரை சந்தித்தார். பின்னர் பேசிய விஜய், பரந்தூரில் விமான நிலைய திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் திமுக அரசை கடுமையாக சாடி பேசியிருந்தார்.இந்த நிலையில் பரந்தூர் மக்கள் நம்பிக்கையோடு இருங்கள் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தவெக தலைவர் விஜய் இன்று தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே!” என பதிவிட்டுள்ளார்.