Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

"எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட முடியாது"- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

By Christon
07 Nov 2025, 11:41 AM
"எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட முடியாது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில், தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்றுத் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் ஆற்றிய உரையில், ஜனநாயகப் பாதுகாப்பு, வாக்காளர் திருத்தம் மற்றும் ராகுல் காந்தியின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களைப் பற்றிப் பேசினார்.

ஜனநாயகப் போராட்டமும் தி.மு.க.வின் வலிமையும்

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது உரையில், "எஸ்.ஐ.ஆர். (Special Intensive Revision) பணிகளை எதிர்த்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, வழக்குத் தொடர்ந்திருக்கிறோம். சட்டப் போராட்டம் ஒருபுறம் நடந்தாலும், வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதை கவனிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது" என்று தி.மு.க.வினருக்கு அறிவுறுத்தினார்.

மேலும், "இன்றைக்கு யார் யாரோ கிளம்பி தி.மு.க.வை அழித்துவிடலாம், ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். எந்தக் கொம்பனாலும் இந்த இயக்கத்தைத் தொட முடியாது. ஜனநாயகத்தைக் காக்க எந்தத் தியாகத்தையும் செய்ய தி.மு.க.வினர் தயாராக இருக்கின்றனர்," என்று அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு ஆதரவு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த வாக்குத் திருட்டுக் குற்றச்சாட்டுகளைப் பற்றியும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். "இளம் தலைவர் ராகுல் காந்தி, எஸ்.ஐ.ஆர் எதிராகப் பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். கர்நாடகா, அரியானா பகுதிகளில் நடந்த வாக்குத் திருட்டை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்," என்று அவர் குறிப்பிட்டார்.

"அப்படி ஒரு நிலை தமிழ்நாட்டில் நடக்கவிடக் கூடாது. வரும் முன் காப்பதே நமது கடமை. ஜனநாயகத்தைக் காக்க எந்தத் தியாகத்தையும் செய்ய தி.மு.க.வினர் தயாராக இருக்கின்றனர்," என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.