Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

"நிதிஷ் குமாரின் கதி உங்களுக்கும் ஏற்படலாம்"- எடப்பாடி பழனிசாமிக்கு திருமாவளவன் விடுத்த எச்சரிக்கை!

By Christon
07 Mar 2026, 11:12 AM
பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட கதி, எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜகவின் அழுத்தம் காரணமாகவே நிதிஷ் குமார் பதவியில் இருந்து விலகுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

அதிமுக-வுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இந்த நிலையில், இன்று சென்னை எழும்பூரில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய விசிக தலைவர் திருமாவளவன், பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அதே நிலை எதிர்காலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். "ஒருவேளை எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வந்தால், அவரால் அந்தப் பதவியில் முழுமையாக நீடிக்க முடியுமா?" என்ற கேள்வியை அவர் முன்வைத்தார். நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட கதி எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

திராவிட இயக்கத்தைக் காக்க வலியுறுத்தல்

அதிமுக-வின் வாக்கு வங்கி குறித்துப் பேசிய திருமாவளவன், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகும் அந்த இயக்கம் 65-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதை நினைவு கூர்ந்தார். "எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கட்டிக்காத்த திராவிட இயக்கமான அதிமுக-வை கரைய விட்டுவிடாதீர்கள், அதனைக் காப்பாற்றுங்கள்" என்று அவர் தெரிவித்தார்.

தனித்து நிற்பதே பலம்

அதிமுக தனித்து நின்றாலே அதன் பலமான வாக்கு வங்கி மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும் என்று குறிப்பிட்ட திருமாவளவன், பாஜக-வுடனான உறவு அல்லது அதன் அழுத்தம் கட்சிக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார். பீகார் அரசியல் மாற்றங்களை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் அதிமுக தலைமைக்கு அறிவுறுத்தியுள்ளார்.