Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

அம்பேத்கர் சிலை நிறுவுவதில் ஏன் இவ்வளவு முட்டுக்கட்டைகள்? கோரிக்கை வைத்த MP திருமாவளவன்

By MUTHUKRISHNAN
29 Mar 2025, 05:59 PM
அம்பேத்கர் சிலை நிறுவுவதில் உள்ள தடைகளை களையவும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு ஓய்வூதியம், அரசு வேலையினை முறையாக வழங்கவும் விசிக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ‘மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு’ கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதன் நிறுவனர் முனைவர் தொல்.திருமாவளவன் MP பங்கேற்று பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு ஓய்வூதியம், அரசு வேலையினை முறையாக வழங்க வேண்டும். மாநில குற்ற ஆவண மைய ஆண்டு அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும். கல்வி நிலையங்களில் பாகுபடுகளைக் களைவது தொடர்பாக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி கே.சந்துரு ஆணைய அறிக்கையை உடனே செயல்படுத்த வேண்டும் போன்ற கருத்துகளை எம்.பி திருமாவளவன் முன்வைத்தார்.

அம்பேத்கர் சிலைகள் நிறுவுவதற்கு உள்ள தடையை நீக்குக: 

இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திலும் அண்ணல் அம்பேத்கரின் சிலையை நிறுவுவதற்கு மாநில அரசு தடை விதிக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் அம்பேத்கர் சிலை நிறுவுவதற்கு மட்டும் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.  இந்த அணுகுமுறை அம்பேத்கரை ஒரு சாதித் தலைவராக சுருக்கி அவமதிப்பதாக உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் தந்தையான புரட்சியாளர் அம்பேத்கரின் சிலைகளை நிறுவுவதற்கு எளிமையான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று திருமாவளவன் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Read more: முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை

மேலும், தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கர் சிலைகளைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கூண்டுகளை அகற்ற வேண்டும் என்றும் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் விசிக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.