Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

எடப்பாடி பழனிச்சாமியின் பொய் பிரச்சாரம், அது தமிழகத்தில் எடுபடாது - அமைச்சர் கோவி. செழியன்

By VASUKI
28 Aug 2025, 09:13 PM
அதிமுக ஆட்சியில் உயர் கல்வியில் தமிழகம் சிறந்தது என்று'எடப்பாடி பழனிச்சாமி செய்யும் பொய் பிரச்சாரம் தமிழகத்தில் எடுபடாது' என்று தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.
தந்தை பெரியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பேச்சு. தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகப் பெருமிதம். அ.தி.மு.க. அரசின் புள்ளிவிவரங்களைக் கேள்வி கேட்டுப் பதிலடி கொடுத்துள்ளார்.

திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசுக் கலை அறிவியல் கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசினார்.

"நான் ஆரம்பப் கல்வி முதல் முனைவர் பட்டம்வரை படித்தது அனைத்தும் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்தான். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே கல்வியென இருந்த நிலையை மாற்றி, அனைவருக்கும் கல்வி என்ற நிலைக்கு நாம் வந்துள்ளோம். இதற்கு உழைத்த அனைத்துத் தலைவர்களையும் நாம் நினைவு கூற வேண்டும். கல்வி கற்கக் கூடாது என எந்தச் சமுதாயத்திற்கு மிரட்டல் விடுத்தார்களோ, அதே சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவன், இன்று மூன்று முறை வெற்றி பெற்று உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கிறேன் என்றால், அதற்குத் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றோரின் கொள்கைகளும், போராட்டங்களும் தான் காரணம்" என உணர்ச்சிபொங்கப் பேசினார்.

மேலும், "இன்று பட்டம் பெறுபவர்களில் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம். இதுதான் தந்தை பெரியார் செய்த புரட்சி. பெரியார் விரும்பியதை இன்று உயர்கல்வித்துறை செய்து வருகிறது. என்றைக்கும் அழிக்க முடியாத சொத்து கல்வி மட்டும்தான். 'எல்லோருக்கும் கல்வி கிடைத்துவிடக் கூடாது' என ஒரு கூட்டம் தொடர்ந்து செயல்படுகிறது. அந்தக் கூட்டம் தி.மு.க.வின் கொள்கையைச் சிதைக்கப் பார்க்கிறது. ஆனாலும், நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை உறுதியுடன் காத்துவருகிறார்" என்றார்.

அதிமுக ஆட்சியில் உயர் கல்வியில் தமிழகம் சிறந்தது என்பது பொய் பிரச்சாரம்!

நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கோவி. செழியன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அளித்த பேட்டிகுறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களால் தான் உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என எடப்பாடி பழனிசாமி கூறுவது ஒரு பொய் பிரச்சாரம். அது தமிழகத்தில் எடுபடாது. அவர்கள் ஆட்சியில் உயர்கல்வியில் இடைநிற்றல் எவ்வளவு? எத்தனை மாணவர் சேர்ந்தனர்? எத்தனை நிதி ஒதுக்கினார்கள்? கடந்த நான்கு ஆண்டுகளில் அதனுடைய புள்ளிவிவரங்கள் என்ன என்பதை ஆய்வு செய்தாலே உண்மை தெரியவரும்" என்று ஆவேசமாகப் பதிலளித்தார்.

மேலும் அவர், "கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிதாக 15 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கியுள்ளோம். 'தமிழ் புதல்வன் திட்டம்', 'புதுமைப்பெண் திட்டம்' போன்ற தி.மு.க. அரசின் திட்டங்களால் தான் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பு அதிகம் படித்தவர்களுள்ள மாநிலம் எது என்று கேட்டால் கேரளா என்பார்கள். ஆனால், இன்று எல்லோரும் தமிழகம் என்று சொல்கிறார்கள். தனிமனிதப் பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தைத் தமிழகம் அடைந்துள்ளது. தமிழக அரசு கூறுவது ஒன்றிய அரசின் தரவுகளின் அடிப்படையில். மாற்று கட்சியினர் கூறுவது பொய் பிரச்சாரம், அது தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.