அரசியல்

மயிலாடுதுறை தவெக.வில் உட்கட்சி பூசல்? மாவட்டச் செயலாளர் vs புதுவரவு ரஜினி!

By Sumalekha
26 Jul 2026, 06:00 PM
மயிலாடுதுறை தவெக.வில் மாவட்டச் செயலாளர் கோபிநாத் மற்றும் புதிதாக கட்சியில் இணைந்த முன்னாள் திமுக பிரமுகர் ரஜினி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது.
தி.மு.க.விலிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த மயிலாடுதுறை நகராட்சிக் கவுன்சிலருக்கும், த.வெ.க. மாவட்டச் செயலாளருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மல்லுக்கட்டு, டெல்டா த.வெ.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, சமூகவலைதளங்களில் இருவரின் ஆதரவாளர்களும் காரசாரமாக கொந்தளிப்பதும் மக்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது!

விஷயம் இதுதான். மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கோபிநாத்திடம் சொல்லாமல் கொள்ளாமல் நேரடியாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் மாஜி தி.மு.க பிரமுகரான ரஜினி, ஊருக்கு திரும்பியவுடன் அதே வேகத்தில் மாவட்டத்திலும் தனி அரசியல் செய்துவருவதாகவும், இவருக்கு மயிலாடுதுறையின் பொறுப்பு அமைச்சரான வெங்கட்ரமணன் ஆதரவாக நின்று மாவட்டச் செயலாளர் கோபிநாத்தை புறக்கணிப்பதாகவும் புகார் பட்டியல் வாசிக்கிறார்கள் கோபிநாத் ஆதரவாளர்கள்.

சமீபத்தில், மயிலாடுதுறை மாவட்ட தவெக சார்பில் விஜய்யின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் பிறந்தநானையொட்டி மயிலாடுதுறை தவெக அலுவலகத்தில் 'தளபதி விலையில்லா விருந்தகம்' தொடங்கப்பட்டது இந்த இரு நிகழ்ச்சிகளிலும் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் வெங்கட்ரமணன் கலந்துகொள்ளவில்லை. ஆனால் புதிதாக கட்சியில் இணைந்த மாஜி திமுக பிரமுகர் ரஜினி நடத்திய முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மட்டும் அமைச்சர் கலந்துகொண்டிருப்பதுதான் இந்த சர்ச்சைகளின் மையப்புள்ளியாக மாறியிருக்கிறது.

இதுபற்றி மயிலாடுதுறை தவெக மாவட்டச் செயலாளர் கோபிநாத்திடம் பேசினோம். "மாவட்ட அளவில் ஒரு கட்சியின் முக்கியப் பொறுப்பாளர் என்றால், அது மாவட்டச் செயலாளர்தான். தொடர்ந்து 22 வருடங்களாக நாங்கள் தளபதிக்காக உழைத்துவருகிறோம். ஆனால் கட்சியில் சேர்ந்து 22 நாள்கூட ஆகாத ஒருவர் தனி லாபி செய்கிறார். இதற்கு மாவட்டப் பொறுப்பு அமைச்சர் வெங்கட்ரமணனும் ஆதரவு மாவட்டத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்கு வருபவர் எனக்கு தகவல்கூட தெரிவிக்கவில்லை நானாக போன் செய்து 'மயிலாடுதுறைக்கு வர்றீங்களாமே.. என் நாலெட்ஜ் இல்லாமல் நடக்கும் அந்த நிகழ்ச்சியில் நீங்கள் எப்படி கலந்துகொள்ளலாம்? என்று கேட்டேன்.

அதற்கு உங்கக்கிட்ட சொல்லிவிட்டதாகச் சொன்னார்கள் என்றவரிடம் எனக்கு அழைப்பு இருந்திருந்தால் நான்தானே உங்களை அழைத்திருப்பேன். எனக்கு அழைப்பே இல்லை' என்றும் சொன்னேன். எங்கள் ஆட்சி அமைந்த பின்னர் கட்சியில் வந்து இணைந்துகொண்டு ஒரு மாவட்டச் செயலாளரான என்னையே புறக்கணிக்கிறார் இதற்கு அமைச்சரும் ஆதரவாக இருக்கிறார்.

நடந்து முடித்த சட்டமன்றத் தேர்தலின்போது அவரது வார்டில் எங்கள் கட்சிப் பொறுப்பாளர்கள். தொண்டர்களை அடித்து அராஜகம் செய்திருக்கிறார். இவருக்கு அமைச்சர் முக்கியத்துவம் கொடுக்கிறார். இதுகுறித்து பொதுச்செயலாளரிடமும் கட்சிக்காக ஆரம்ப காலத்திலிருந்து கஷ்டப்பட்ட எங்களை புறக்கணித்துவிட்டு தி.மு.க.விலிருந்து வந்தவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது பிடிக்கவில்லை' என்று வெளிப்படையாக சொல்லிவிட்டேன்.

இதனால்தான் அவரது நிகழ்ச்சியில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை. அவரிடம் பணம் இருப்பதால் இப்படி நடந்துகொள்கிறார்களா என்றும் தெரியவில்லை காசு, பணம் எப்போது வேண்டுமானாலும் வரும். கட்சிக்கு உழைப்புதான் தேவை. இந்த விஷயத்தில் பொதுச்செயலாளர் சரியாக இருக்கிறார். மாவட்ட பொறுப்பு அமைச்சர்தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்றார் வருத்தமாக மாஜி தி.மு.க. பிரமுகர் ரஜினியிடம் பேசினோம்.

தனிப்பட்ட முறையில் அரசியல் செய்கிறேன் என்று சொல்வது தவறு, தவெ.களில் இணைய முடிவெடுத்தவுடன் முதலில் மாவட்டச் செயலாளரிடம்தான் பேசினேன். அவரோ என்னை தெரியாத மாதிரியே காட்டிக்கொண்டார். என்னை அவருக்கு நன்றாகவே தெரியும். இது எனக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவரை தொடர்புகொண்டபோது 'நான் பிஸியா இருக்கேன்' என்று என் தொடர்பையே துண்டித்தார்.

அதன்பின்னர்தான் தலைமைக்குச் சென்று பொதுச்செயலாளர் முன்னிலையில் கட்சியில் இணைந்தேன். அதன்படி கட்சிப் பணியை செய்துவருகிறேன். பின்னர் மாவட்டப் பொறுப்பு அமைச்சரான வெங்கட்ரமணனை சந்தித்து 'தவெகளில் இணைய நிறைய பேர் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களை எப்படி இணைப்பது?" என்று கேட்டேன். அவரோ நான் மாவட்டத்திற்கு வரும்போது அதற்கான நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்யுங்கள்' என்றார்.

அதன்பின்னர் பொதுச்செயலாளரையும் நேரில் சென்று சந்தித்து இணைப்பு நிகழ்ச்சி குறித்து சொன்னேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். அதன் பிறகே மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் விழாவுடன் சேர்த்து முதல்வர் பிறந்த நாள் விழாவையும் அமைச்சர் தலைமையில் நடத்த முடிவு செய்தோம். விழாவிற்கான அழைப்பிதழை நான் கொடுத்தால் வாங்கமாட்டார் என்பதால் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், மக்கள் மன்றத்தின் பொறுப்பாளராக இருந்தவர் உள்ளிட்ட பலரையும் அழைப்பிதழ் கொடுக்க அனுப்பினேன்.

ஆனால் அவரோ, 'ரஜினி சம்பந்தப்பட்ட எதற்கும் என்னிடம் வராதீர்கள்' என்று கோபமாக பேசி அழைப்பிதழை வாங்க மறுத்துவிட்டார். இதனை அமைச்சருக்கும் தெரிவித்துவிட்டோம். அதேபோல் அவர்கள் வரமாட்டார்கள் என்பதும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்புதான் தெரிந்தது. மாவட்டச் செயலாளருக்கு ஆதரவான ஒரு குறிப்பிட்ட ஈமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் சமூக வலைதளங்களில் என்னைப்பற்றி தவறாக விமர்சிக்கின்றனர்.

மா செ வந்திருந்தால் அவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியாக பேசப்பட்டிருக்கும். அது அவருக்கான அங்கீகாரமாகவும் இருந்திருக்கும். ஏற்கெனவே, இவர் நடத்திய முதல்வர் பிறந்த நாள் விழாவிற்கான போஸ்டர்களில் பொறுப்பு அமைச்சரின் படத்தைக்கூட போடாததும் விவாதமானது. எந்த சூழலிலும் நான் தனிப்பட்ட அரசியல் செய்யமாட்டேன்" என்றார்.

நிறைவாக, மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சர் வெங்கட்ரமணனிடம் கேட்டபோது, “சிறு சிறு பிரச்னைகள் இருந்தால் அவை பேசி தீர்க்கப்படும் என்றார்.
உட்கட்சி பூசல் நல்லதல்ல.