அரசியல்

மக்கள் போற்றும் மகத்தான கூட்டணி அமைப்போம்.. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

By Christon
10 Aug 2025, 08:32 AM
“2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் போற்றும் மகத்தான கூட்டணியை தேமுதிக அமைத்து மகத்தான வெற்றியை பெறும்” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக முழுவதும் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

மக்கள் போற்றும் மகத்தான கூட்டணி

அப்போது அவர் பொதுமக்கள் இடையே பேசியதாவது, “ பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் வழிநெடுகளில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் மூலம் தர்மபுரி தேமுதிகவின் கோட்டை என நிரூபிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் போற்றும் மகத்தான கூட்டணியை தேமுதிக அமைத்து மகத்தான வெற்றியை பெறும்.

3வது பெரிய கட்சி தேமுதிக

திமுக, அதிமுக என ஆண்ட கட்சிகளுக்கு அடுத்தபடியாக தேமுதிக தான் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. தமிழகத்தில் பூத் கமிட்டி அமைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேமுதிக உள்ளது. தேமுதிகவின் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணம் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளத்து.

மாற்றம் தேவை

தமிழ்நாட்டில் போதிய வேலை வாய்ப்பு இல்லாமல் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நிச்சயமாக மாற்றம் வர வேண்டும். இந்த மாற்றம் மக்கள் விரும்பும் மாற்றமாக இருக்க வேண்டும்.

வரும் 25 ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக அனைவரும் கொண்டாட வேண்டும். மேலும் வரும் ஜனவரி மாதம் 9 ஆம் தேதி கடலூரில் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாடு தமிழகமே கண்டிடாத அளவு பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படும். தேமுதிகவிற்கு நிகர் தேமுதிக தான் என்பதை தொண்டர்கள் நிரூபிக்க வேண்டும்" என தெரிவித்தார்.