அரசியல்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன்!

By Christon
06 Jan 2026, 03:28 PM
கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தி வரும் தீவிர விசாரணையின் ஒரு பகுதியாக, தற்போது த.வெ.க. தலைவர் விஜய்க்கே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

விரிவான விசாரணைச் சுழல்

உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, போலீசார், உடற்கூறு ஆய்வு மருத்துவர்கள், காயமடைந்தவர்கள், நேரில் பார்த்தவர்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் எனப் பல தரப்பினரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும், த.வெ.க. மாநிலப் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உட்பட முக்கிய நிர்வாகிகளும் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விஜய்க்கு அனுப்பப்பட்ட சம்மன்

இந்தச் சூழலில், கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்மனில், அவர் வரும் ஜனவரி 12-ஆம் தேதி நேரில் ஆஜராகி, சம்பவம் குறித்துத் தனது தரப்பு விளக்கத்தை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.