அரசியல்

கரூர் சம்பவம்: தனி விமானம் பிடித்து ஓடியது யார்? முதல்வர் விஜய் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

By Christon
10 Jul 2026, 05:56 PM
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய முதல்வர் விஜய்க்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய முதல்வர் விஜய்க்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். "கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார்?" என்று முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?

மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.

அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?

திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஓடு. ஓடு.. ஓடு" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.