அரசியல்

ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்காத ஆளுநர்: மெரினாவில் கூடத் தயாராகும் தவெக தொண்டர்கள்!

By Christon
07 May 2026, 11:26 AM
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி காரணமாக, தமிழக அரசியலில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி காரணமாக, தமிழக அரசியலில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதன் பலம் 113-ஆக உயர்ந்துள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படும் நிலையில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் ஆளுநரைச் சந்தித்து விஜய் உரிமை கோரியும், இதுவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காதது தவெக தரப்பினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக - திமுக கூட்டணி?

ஆளுநர் தரப்பிலிருந்து தாமதம் ஏற்படுவதற்குப் பின்னணியில், அதிமுக மற்றும் திமுக இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாக வெளியாகும் தகவல்களே காரணம் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல் தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல மெரினாவில் மீண்டும் ஒரு மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனச் சமூக வலைதளங்களில் தவெகவினர் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

மெரினாவில் போலீஸ் குவிப்பு

போராட்ட அறிவிப்புகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், போராட்டக்காரர்கள் திரள்வதைத் தடுக்கவும் போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே, தவெக தலைவர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு முன்பாகத் தொண்டர் ஒருவர் கண்ணீர் மல்கப் பிரார்த்தனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கட்சியின் உணர்ச்சிப்பூர்வமான சூழலைப் பிரதிபலித்து வருகிறது.