Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

ஜி.கே.மணி பேசுவது அவருக்கு அழகல்ல - பாமக வழக்கறிஞர் பாலு ஆவேசம்!

By VASUKI
16 Sep 2025, 09:51 PM
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைமை அலுவலக முகவரி மாற்றப்பட்டதாக ஜி.கே.மணி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு, ஜி.கே.மணி இப்படி மாற்றிப் பேசுவது அவருக்கு அழகல்ல எனக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
பாமக தலைவர் பதவி விவகாரம் தொடர்பாகச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார். அப்போது பேசிய அவர்,

திடீரென முகவரி மோசடி நடந்திருக்கிறது. பாமக நிரந்தர முகவரி 63, நாட்டு முத்து நாயக்கன் தெரு தான். தலைவரின் பதவி காலம் முடிந்து விட்டால், அந்த அதிகாரம் நிறுவனருக்கு சென்று விடும். ஒரு கட்சியின் அதிகாரம், விதிகள் யாருக்கு என்பது நீதிமன்றம் தான் சொல்ல வேண்டும். அந்த அடிப்படையில் நேற்று, தேர்தல் ஆணையத்திடமிருந்து வந்த கடிதம் அவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த பாமக தொண்டர்களும் தெளிவாக இருக்கிறார்கள்.

முகவரி மோசடி திடீரென்று நடந்ததாகவும், அது நேற்று தான் தெரியும் என்றும் ஜி.கே மணி சொல்வது, 25 வருடமாகக் கட்சியில் இருப்பவர் இப்படி அபாண்டமாகப் பேசுவது நியாயமில்லை.
1.6.2022 இல் தேர்தல் ஆணையத்தில் கொடுத்த கடிதத்தில், கட்சியின் தலைமை அலுவலமாக 10, திலக் தெருவைத் தான் கொடுத்தோம். தேர்தல் ஆணையம் கொடுத்த பல்வேறு கடிதங்கள் இந்த முகவரிக்குத் தான் வருகிறது. தி. நகருக்கு கட்சி அலுவலகம் மாற்றி 3 ஆண்டுகளாகிறது. ஜி.கே மணி இப்படி மாற்றிப் பேசுவது அவருக்கு அழகல்ல.

அலுவலக முகவரி மாற்றம் இன்று ஜிகே மணி சொல்வது கபட நாடகம். 25 ஆண்டுகளாகக் கட்சியின் தலைவராக இருந்தவர், இப்படி தவறான செய்தியைச் சொல்லலாமா? இது உங்களுக்குக் கண்ணியமானதா என்று ஜிகே மணியைப் பார்த்துக் கேட்கிறேன்.

2022 தான் கௌரவ தலைவராக ஜி கே மணி மாற்றப்பட்டு, தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டார். கடந்த பொதுக்குழுவில், தலைவர் அன்புமணியின் பதவிக்காலம் நீட்டிப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றி, அதைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியதாகவும் கூறினார்.

பாமக கட்சியின் நோக்கங்களுக்கு எதிராக நாங்கள் ஒருநாளும் செயல்பட போவதில்லை. எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. ஆனால் சரியாக முன்வையுங்கள் என்றும் அன்புமணி இல்லாமல் எதிர்காலத்தில் பாமகவை வழிநடத்த முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.