அரசியல்

“பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்பதில் உறுதி!” – அமைச்சர் நிர்மல்குமார்

By Sumalekha
18 Jun 2026, 03:03 PM
பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக மீண்டும் அரசியல் விவாதம் எழுந்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பரந்தூரில் விமான நிலையம் வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அப்பகுதி மக்களின் உணர்வுகளையும், நீண்ட காலமாக நடைபெற்று வரும் போராட்டங்களையும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது” என்றார்.

மேலும், “தமிழக வெற்றி கழகத்தின் முதல் போராட்டமே பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக நடைபெற்றது. அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது தான் அரசின் நோக்கம்” என்றும் அவர் கூறினார்.

விமான நிலையத் திட்டத்தை முழுமையாக கைவிடாமல், மாற்று இடத்தில் அமைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.