அரசியல்

பூச்சாண்டி கதையை அவிழ்த்து விடும் முதல்வர்.. எல்.முருகன் விமர்சனம்

By Jayakumar
06 Jun 2025, 05:55 PM
தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சித்து வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் தொடர் முயற்சி செய்து வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முதலமைச்சருக்கும் மனமில்லை எனவும் தெரிவித்துள்ளார் .

தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027 ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பாஜக வெளிப்படையாக அறிவித்துள்ளது.

தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது.

நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். ஒன்றிய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்" என அவர் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சரின் இந்த பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் பக்கத்தில், "நாடுமுழுவதும் 2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி விவரங்களும் சேகரிக்கப்பட்டு, கணக்கெடுப்பு நடைபெறும் என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துவிட்டது.

மத்திய அரசின் முயற்சியால் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்து, பழங்குடி, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் விகிதாச்சாரங்களுக்கு ஏற்ப இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகையைப் பெறவுள்ளனர். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மத்திய பாஜக அரசின் சமூகநீதி சிந்தனைத் திட்டம்.

பீகார் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்கள், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்போது, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனமில்லை. இதுதொடர்பாக நான் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளேன். அப்போதெல்லாம் தங்களால் ஆகாது என்று ஸ்டாலின் கை விரித்து விட்டார். தற்போது, மத்திய அரசே அதனை செய்வதால், மீண்டும் தனது பூச்சாண்டி கதையை அவிழ்த்து விடத் தொடங்கி இருக்கிறார், தமிழக முதலமைச்சர்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பை 2027-ம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி செய்வதாக திரு.ஸ்டாலின் மீண்டும் ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்.

2027-ம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவதால் தொகுதி மறுவரையறையில் தமிழகத்துக்கு எப்படி பிரதிநிதித்துவம் குறையும்? இது என்ன பூச்சாண்டி? பொய் சொல்வதிலும் ஒரு பொருத்தம் வேண்டாமா?

தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படாது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தபோதே தெளிவுபடுத்தி விட்டார். மத்திய அரசின் சார்பிலும் பாஜக சார்பிலும் பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது.

இல்லாத ஒன்றை, அறிவிக்காத ஒன்றை வைத்து விஷம பிரசாரத்தை திமுக செய்வது ஏன்?
திமுக ஆட்சியில் தமிழக மக்கள் படும் துயரம் ஒன்றல்ல இரண்டல்ல.

சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைக் கலாச்சாரம், பெண்கள் தெருக்களில் நடமாட முடியாத நிலை, மதுவிற்பனையில் சாதனை, நாள் தவறாமல் நடைபெறும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் என்று தமிழக மக்களின் துயரங்கள் தொடர்கின்றன.

மது ஆலைகள் நடத்தும் திமுகவினர் தமிழக மக்களின் பணத்தைச் சுரண்டி, உடல்நலத்தைக் கெடுத்து வாழ்கின்றனர். உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் என்று ஒவ்வொரு தரப்பு மக்களும் படும் துயரங்கள் ஏராளம். இந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் எண்ணற்றவை.

தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முடியமா என்று, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பாஜகவையும், மத்திய அரசையும் கண்டித்தால் தனது ஆட்சியில் நடக்கும் அவலங்களையும், ஊழல்களையும் மக்கள் மறந்து விடுவார்கள் என்று மனக்கணக்கு போடுகிறார் ஸ்டாலின். அவரது விஷமப் பிரசாரத்தை நம்ப தமிழக மக்கள் தயாரில்லை. தமிழகத்தை குட்டிச்சுவராக்கும் திமுக ஆட்சி எப்போது அகலும் என்பது தான் தமிழக மக்களின் தற்போதைய எண்ணமும் எதிர்பார்ப்பும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.