Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

அதிமுக - பாஜக கூட்டணி உறவில் புதிய திருப்பம்! சேலத்தில் எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு!

By VASUKI
21 Sep 2025, 01:15 PM
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சேலத்தில் சந்தித்துப் பேசியது, தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள ஒரு நிகழ்வாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சேலம் மாவட்டத்தில் சந்தித்துப் பேசினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியிருந்த நிலையில், இந்த திடீர் சந்திப்பு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பொதுவெளியில் பெரிதும் வெளிப்படுத்தப்படாத இந்தச் சந்திப்பு, அதிமுக மற்றும் பாஜக இடையேயான எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள் குறித்துப் பல யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. "இந்தச் சந்திப்பு, வெறும் மரியாதை நிமித்தமானதா அல்லது தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளின் ஒரு அங்கமா?" என்ற கேள்விகள் அரசியல் பார்வையாளர்களிடையே வலுப்பெற்றுள்ளன.

குறிப்பாக, தமிழகத்தில் கூட்டணி அரசியலில் நிலவி வரும் குழப்பமான சூழலில், இந்தச் சந்திப்பு இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின் பின்னணி மற்றும் இதன் மூலம் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகள் குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ள நிலையில், இரு கட்சிகளின் அதிகாரபூர்வமான விளக்கத்துக்காக அரசியல் உலகினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம், அக்டோபர் மாதம் நயினார் நாகேந்திரன் தொடங்க உள்ள மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.