அரசியல்

இபிஎஸ் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்.. அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்

By Christon
11 Jul 2025, 01:20 PM
“தான் நினைந்து நடக்கவில்லை என்பதால் எடப்பாடி பழனிசாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்” என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.
அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு வார்டுகளில் ரூ.3.88 கோடி மதிப்பிலான சாலைகள் அமைக்கும் பணிகளையும் ரூ.24.75 ஆயிரம் மதிப்பிலான குடிநீர் வழங்கு வாகனத்தின் செயல்பாட்டினையும் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். தான் முதல் நாள் பேசுவதை மறுநாள் மறுத்து பேசுகிறார். வேறொரு நாள் வேறொரு புது கதையை அவர் திருத்தி பேசுகிறார். அவரது ஒவ்வொரு நாள் வீடியோவும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவர் எந்த அளவிற்கு விரக்தியில் இருக்கிறார் என்பது தெரிகிறது.

பாஜக அவர்கள் தோளில் ஏறி உட்கார்ந்து கொண்டு, பாஜகவின் கொள்கைகளை எடப்பாடி பழனிசாமி பேசுகின்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

அவர் தூக்கும் சுமை தாங்காமல் திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்பதை பார்த்து எல்லோரையும் விமர்சனம் செய்யும் நிலைக்கு வந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அவர் நினைத்தது நடக்கவில்லை என்பதால் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சீமான் மக்களை மாக்களாக நினைத்து தான் பேசுவார், அவர் மனிதர்களாக நினைத்து பேச மாட்டார். அவர் வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவார். இன்றைக்கு அவரின் உண்மை நிலை வெளிப்படுத்தும் வகையில் ஆடு மாடுகளுக்கு முன்னால் பேசி வருகிறார். அவரது கடைசிகட்டம் நெருங்கி வருவதை இது காட்டுகிறது” என அவர் கூறினார்.