அரசியல்

நூலிழையில் தப்பிய எடப்பாடி பழனிசாமி.. செங்கத்தில் பரபரப்பு!

By Christon
16 Aug 2025, 07:36 PM
செங்கத்தில் அதிமுக சார்பாக வைக்கப்பட்ட அலங்கார வளைவு விழுந்ததில் அந்த வழியாக சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பெரும் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சார பயணம்

தென்மாவட்டங்களில் தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்த எடப்பாடி பழனிசாமி, அதன் ஒரு பகுதியாக நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி, வந்தவாசி, செய்யாறு ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். இன்று திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினருடன் அவர் கலந்துரையாடினார். அதன் பின்னர், செங்கம் சட்டமன்றத் தொகுதியில் மக்களைச் சந்திக்க தனது பிரசார வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.

நூலிழையில் தப்பிய இபிஎஸ்

செங்கம் பகுதியில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அதிமுக சார்பில் சாலையின் இருபுறமும் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கட்சியின் கொடிகள், பேனர்கள், அலங்கார வளைவுகள் என சாலை முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி பயணித்த பிரசார வாகனம், சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த ஒரு பிரமாண்டமான அலங்கார வளைவைக் கடந்து சென்றது. அவர் கடந்து சென்ற அடுத்த நொடியே, அந்த அலங்கார வளைவு திடீரெனச் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, அவரது வாகனம் அந்த இடத்தை முழுமையாகக் கடந்து சென்றதால், அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

அந்த அலங்கார வளைவு, பழனிசாமியின் வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த மற்ற வாகனங்களின் மீது விழுந்தது. இதனால், சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கட்சியினர் மற்றும் காவல்துறையினர், சாலையில் விழுந்த பேனர் மற்றும் சவுக்குக் கம்புகளை அகற்றிப் போக்குவரத்தைச் சரிசெய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.