Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

அமித்ஷாவை சந்தித்தது ஏன்?.. எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் விளக்கம்!

By Christon
17 Sep 2025, 12:43 PM
மத்திய அமைச்சர் அமிட்ஷாவுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (செப்.16) டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

அமித்ஷாவுடன் சந்திப்பு

டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, நேற்று மாலை குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு, இரவு 8 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்துக்குச் சென்றார். அவருடன் கட்சியின் எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி. சண்முகம், ஐ.எஸ். இன்பதுரை, தனபால் மற்றும் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் சென்றனர்.

சுமார் அரை 20 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

எடப்பாடி பழனிசாமியின் விளக்கம்

இந்தச் சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது: "உள்துறை அமைச்சர் அமித்ஷாவைத் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காகப் பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கிட வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.