Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

அரசியல் உள்நோக்கத்துடன் ஈடி சோதனை.. செல்வப்பெருந்தகை கண்டனம்!

By Christon
16 Aug 2025, 03:02 PM
“அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது” என்று செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பழிவாங்கும் நடவடிக்கை என செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக அரசு செய்யும் சூழ்ச்சிதான் இந்தச் சோதனை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் ஈடி சோதனை

அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2006-2011 காலகட்டத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தபோது, அப்போதைய காவல்துறை ஐ.ஜி. ஜாபர் சேட்டுக்கு சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வந்த நிலையில், தற்போது சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் வீட்டிலும் சோதனை நடப்பதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செல்வபெருந்தகை கண்டனம்

இந்த நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், தி.மு.கட்சியின் மூத்தத் தலைவருமான ஐ.பெரியசாமிக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது.

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் பிளவுபடுத்தவும் பாஜக அரசு செய்யும் சூழ்ச்சிதான் அமலாக்கத்துறை சோதனை. இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பையும் சிதைக்கக் கூடியவை. அமலாக்கத்துறையினரின் இத்தகைய நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.