அரசியல்

இபிஎஸ் தவறுதலால் தவெக எதிர்க்கட்சியாக உருவெடுத்து வருகிறது- காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

By Jayakumar
22 Sep 2025, 02:28 PM
அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும் சொந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறார்கள் என மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு

விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது எந்த புரட்சியும் இல்லை. தவறை திருத்தி இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் தவறுதலால் தமிழக வெற்றிக்கழகம் எதிர்க்கட்சியாக உருவெடுத்து வருகிறது.

தவெக பெரிய கட்சி

அண்ணாமலை,எடப்பாடி பழனிசாமி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து தவெகவை பெரிய கட்சியாக மாற்றிக்கொண்டு இருக்கிறது.

சிபிஐ, அமலாக்கத்துறை மூலமாக பல கட்சிகளை மிரட்டி தங்களது கூட்டணிக்கு வளைத்துப்போடும் வேலையை அமித்ஷா செய்து வருகிறார். அதேபோல் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஒரு வாரத்தில் சசிகலாவை சார்ந்த இடத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.

அமலாக்கத்துறை சோதனை

அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும் சொந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் மிரட்டும் அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எதிர்க்கட்சியாக கூட இல்லாத நிலைக்கு மாறிவிட்டது.அந்த இடத்தை விஜய்தான் நிரப்புவார் . எதிர்க்கட்சி அந்தஸ்து எடப்பாடி பழனிசாமியிடம் இல்லாமல் போகும்” என தெரிவித்தார்.