Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

'திமுக வேரை அசைக்க முடியாது.. ‘ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி முதல்வராவார்’- அமைச்சர் ரகுபதி

By Christon
23 Aug 2025, 05:23 PM
"முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பின்னால் உதயநிதி ஸ்டாலின் தான் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நேற்று நடைபெற்ற பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “உதயநிதி ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது என்றும் திமுகவை வேரோடு அகற்ற வேண்டும் என்று கூறினார்.

இந்த நிலையில், புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “திமுக வேரை அசைத்து பார்க்க முடியாது” என்று அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டியின் விவரங்கள் பின்வருமாறு;

திமுக வேரை அசைத்து பார்க்க முடியாது. ஏனென்றால், திமுகவின் வேர் ஆழமானது. அந்த வேர் எங்கு உள்ளது என்பதைக்கூட அமித்ஷாவால் கண்டறிய முடியாது. முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பின்னால் உதயநிதி ஸ்டாலின் தான் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்பார். எந்த அமித்ஷா வந்தாலும் இதனைத் தடுக்க முடியாது. ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினுக்குக் கட்டம் சரியில்லை என்று சொன்னார்கள். ஆனால், அதைத் தவிடுபொடியாக்கி அவர் முதலமைச்சர் ஆனார். அதேபோல் அவருக்குப் பின்னால் உதயநிதி ஸ்டாலினும் முதலமைச்சர் ஆவார்” என்றார்.

'பாஜக பகல் கனவு காண்கிறது'

“பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் மூன்று மாதங்கள் சிறையில் இருந்தால் தானாகப் பதவி பறிபோய்விடும் என்று நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. இருப்பினும், ஒருவேளை நிறைவேற்றப்பட்டால், நீதிமன்றம் மூலமாக இந்தச் சட்டத்தைத் தவிடு பொடியாக்கிவிடுவோம். அதற்கு எங்கள் வழக்கறிஞர்கள் தயாராக உள்ளனர்.

பாஜக குறுக்கு வழியில் ஆட்சியில் இருப்பவர்களை ஏதாவது ஒரு குற்றம் சாட்டிச் சிறைக்கு அனுப்பி, அதன் மூலமாக அவர்களின் பதவியைப் பறித்து ஆட்சிக்கு வர முடியுமா என்று பார்க்கிறது. அவர்கள் பகல் கனவு காண்கிறார்கள். எங்களுக்குத் தேர்தலைக் கண்டு பயம் கிடையாது. மக்களுடைய நம்பிக்கை திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான்” என்றும் அவர் கூறினார்.

'இயற்கை வளங்கள் கொள்ளைக்கு மத்திய அரசே பொறுப்பு'

இயற்கை வளங்கள் கொள்ளை குறித்து அமித்ஷா வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சர், “இயற்கை வளங்களில் நாங்கள் எங்கு கொள்ளையடித்துள்ளோம் என்று அவர்கள் கூற வேண்டும். அதிகாரம் மத்திய அரசின் கையில்தான் உள்ளது. தமிழகத்திலிருந்து இயற்கை வளங்கள் வேறு எந்த மாநிலங்களுக்கும் செல்லவில்லை. அப்படிச் சென்றிருந்தால், அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு; தமிழக அரசு பொறுப்பல்ல.

இயற்கை வளங்கள் கொள்ளை குறித்து ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனை நடத்தி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. நீதிமன்றம் குற்றம் நடந்துள்ளது என்று எந்தத் தீர்ப்பும் தரவில்லை. வழக்கு தொடர்ந்த உடனேயே குற்றவாளி என்று கூற முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வந்த பிறகுதான் அது தெரியவரும். பல வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

'2026-ல் பாஜகவுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்'

“எங்கள் மீது குற்றம்சாட்டுவதற்குப் பதில், எடப்பாடி முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை அனைவர் மீதும் வலுவான குற்றச்சாட்டுகள் மீதுதான் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 2021 தேர்தல் வாக்குறுதிகளை எது நிறைவேற்றவில்லை என்று அவர்கள் கூற வேண்டும். நாங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டோம். சொல்லாததையும் செய்துவிட்டோம். 2026 தேர்தல் முடிவு மீண்டும் பாஜகவிற்கு ஒரு பாடம் புகட்டும்” என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.