அரசியல்

திமுகவின் ஃபெயிலியர் ஆட்சி… எல்.முருகன் விமர்சனம்

By Christon
14 Jul 2025, 01:24 PM
திமுக ஆட்சி ஃபெயிலியர் ஆட்சி என்றும் இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்கலந்துகொண்டார். அதனையடுத்து, பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் அவர் சுவாமி தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் சில வழக்குகள் தமிழக காவல்துறை அழுத்தம் கொடுக்கும் என்ற காரணத்தால் நியாயமான நீதி கிடைக்க வேண்டும் என்பதாலும் தமிழகத்தில் உள்ள சில வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்படுவது வழக்கம்.

சிபிஐ ஒரு வழக்கை நடத்துகிறது என்றால் அதில் நிச்சயமாக நியாயம் கிடைக்கும் என மக்கள் நம்புகின்றனர். அஜித் குமார் வழக்கு ஒரு சாராருக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சி ஃபெயிலியரான ஆட்சி. இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். இன்னொரு புறம் மது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கிராமங்களில் எளிதாக கிடைக்கிறது. இளைய சமுதாயத்தினர் இடையே இந்த பழக்கம் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது.

கிராமப்புறங்களில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லாததால் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர் கேட்டால் லாக்கப் டெத், புகார் அளிப்பவர்கள் மீது தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுகிறது” என்று அவர் கூறினார்.