Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

திமுக பவள விழா... AI வடிவில் கருணாநிதி... மகிழ்ச்சியில் பூரித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

By nishika
12 Sep 2024, 09:51 PM
AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நமது கண்கள் முன் தோன்ற உள்ளார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூர் மத்திய பகுதி திமுக சார்பில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. ஈசிஆர் சாலை அக்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற 100 வது கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்திற்கு அதிக வாக்கு வாங்கி தந்த 200 வது வார்டுக்கு ஒரு லட்சம் ரூபாயும்,197 வது வார்டுக்கு 50 ஆயிரம் ரூபாயும், 191 வது வார்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். 

பேரறிஞர் அண்ணாவால் 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை கடந்து இந்த ஆண்டு பவள விழாவை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் பெரியார், அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாளான செப்டம்பர் 17ம் தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்படவுள்ளது. இது திமுகவின் பவள விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா சென்னை நந்தனம், YMCA மைதானத்தில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. 

இதுகுறித்து மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “திமுகவின் பவள விழாவில் AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, வருகை தந்து 50 நொடிகள் மட்டுமே இருப்பார். மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின் அருகில் அமர்ந்து ஆசிர்வதித்து, வயதான காலத்தில் எப்படி அமர்ந்தபடி பேசுவாரோ அதேபோல் பேச உள்ளார். இதுவரை அமைக்காத அளவில் 300-600 என்ற தூரம் பந்தல் அமைக்கப்படும். பந்தலில் அமர்ந்து கொண்டு மேலே பார்த்தால் அரண்மனையை பார்ப்பது போன்று இருக்கும். நூற்றாண்டை கண்ட இயக்கம் திராவிட கழம் தான். பவள விழாவையொட்டி சோழிங்கநல்லூர் தொகுதியில் அனைத்து தெருக்களிலும் கழக கொடியேற்ற அறிவுறுத்தியுள்ளோம். 

மேலும் படிக்க: பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா.. அக்டோபர் 2ல் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சோழிங்கநல்லூர் தொகுதியில் 96 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்ற நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இதை விட 50,000 கூடுதலாக பெற வேண்டும் என்ற எண்ணத்தில் திமுகவினர் பணியாற்ற வேண்டும். எப்பொழுதும் ஒரு இடத்தில் மட்டும் திமுக கொடியை இறக்கவே முடியாது.  தேர்தல் வந்தாலும் அறிவாலயத்தில் உள்ள 116 அடி உயரத்தில் பறக்கும் கொடியை இறக்க முடியாது. ஏனென்றால் அது பட்டா இடத்தில் உள்ளது. 2017-க்கு பிறகு எத்தனை தேர்தலில் நின்றோம் அனைத்திலும் வெற்றியை மட்டுமே பெற்றுள்ளோம். இதற்கு காரணம் கூட்டணியை சிந்தாமல் சிதறாமல் ஆளுமை செய்து வரும் முதலமைச்சரின் பண்புதான்” என தெரிவித்துள்ளார்.