Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

எம்.எல்.ஏ காலில் விழுந்த திமுக எம்.பி.. இதுதான் சமூகநீதி கட்சியா?.. விளாசும் நெட்டிசன்கள்

By leninakathiya
30 Jul 2024, 12:12 PM
DMK MP Malaiyarasan Bows MLA Vasantham Karthikeyan : அரசு நிகழ்ச்சி ஒன்றில் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் காலில் விழுந்து திமுக எம்.பி மலையரசன் ஆசிர்வாதம் வாங்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

DMK MP Malaiyarasan Bows MLA Vasantham Karthikeyan : கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரத்தில் 3.95 கோடி ரூபாய் மதிப்பில் ரிஷிவந்தியம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக புதிய கட்டிடத்தை தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்தத் திறப்பு விழாவை முன்னிட்டு வானபுரத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் [Vasantham Karthikeyan] ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினர். அப்போது பேசிய வசந்தம் கார்த்திகேயன் திமுக ஆட்சியின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பல்வேறு பணிகள் குறித்து பட்டியலிட்டு பேசினார். மேலும் அவர் பேசுகையில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.மலையரசன் நாடாளுமன்றம் கூட்டத்திற்கு செல்வதற்கு 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து விமான டிக்கெட் புக் செய்து விட்டார். அந்த பணத்தை நானே கொடுக்கிறேன், நீ நாடாளுமன்றத்திற்கு போக வேண்டாம் என ஒருமையில் பேசினார்.

அப்போது, இருக்கையில் அமர்ந்திருந்த மலையரசன் [Malaiyarasan] எம்.பி.யை எழுப்பி, இன்று அவருக்கு பிறந்தநாள் என சால்வை அணிவித்தார். அப்போது, எம்.பி மலையரசன் உடனடியாக தான் ஒரு எம்பி பதவியில் உள்ளதை கூட கருத்தில் கொள்ளாமல், உடனடியாக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி அமர்ந்தார். அரசு நிகழ்ச்சி ஒன்றில், எம்.எல்.ஏ காலில், எம்.பி விழுந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும், அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் உள்ளிட்டவைகள் கூட பாடாமல் அரசு நிகழ்ச்சி எப்படி நடத்த வேண்டும் என்றும் விதிமுறைகளை பின்பற்றாமல் கட்சி நிகழ்ச்சி போல் நடத்தப்பட்ட நிலையில், கடைசிவரை எம்.பி. மலையரசன் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாததும் அங்கு சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இதுபோன்ற மரியாதை குறைவாக நடத்தப்படும் சம்பவம் திமுக கட்சியின் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகநீதிப் பேசும் திராவிட மாடல் ஆட்சியென கூறும், இந்த ஆட்சியினுடைய அவலத்தை ஒரு எம்பி எப்படி மரியாதை குறைவாக நடத்தப்படுகிறார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலை என பேசிவரும் திமுக, மேடை நாகரீகம் கூட இல்லாமல் நடந்துகொள்வதாகவும் கருத்துகளை தெரிவித்து வருகிறன்றனர்.