Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

டாஸ்மாக் வழக்கு: அதிமுக-பாஜக தொடர்பு தெரிகிறது.. அமைச்சர் ரகுபதி விளாசல்

By nagalekshmi
07 Apr 2025, 03:06 PM
தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கை வைக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “இன்று நிருபர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசு ஏன் உச்ச நீதிமன்றத்தில் வேறு ஒரு மாநிலத்திற்கு டாஸ்மாக் வழக்கை மாற்ற கோரிக்கை வைக்கிறது. உங்களுக்கு பயமா என்று கேட்டார். எங்களுக்கு மடியில் கணமில்லை. உச்ச நீதிமன்றத்தில் எல்லா வழக்கையும் சேர்த்து ஒன்றாக விசாரியுங்கள் என்று தான் கூறினோம். வேறு மாநிலத்தில் விசாரியுங்கள் என்று கேட்கவில்லை.

டாஸ்மாக் சோதனையில் என்ன ஆவணம் எவ்வளவு கைப்பற்றப்பட்டது என்று தெரிவிக்கவில்லை. ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை 1000 கோடி என்று கூறினார். அதைத்தொடர்ந்து டெல்லி சென்று வந்த எடப்பாடி பழனிசாமி 1000 கோடி என்று கூறினார். இதன் மூலமாக அவர்களின் தொடர்பு நமக்கு தெரிகிறது. டாஸ்மாக்கில் எந்த முறைகேடுகளும் இல்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும். எந்த தவறுக்கும் முதலமைச்சர் அரசு இடம் கொடுக்கவில்லை.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியாயத்திற்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் தீர்ப்பின் நடவடிக்கை மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறினார். மேலும், பாஜக 2016 தேர்தலுக்கு முன்பாக நாங்கள் மீனவர்கள் மீது அக்கறை கொள்வோம் என்று கூறினார்கள். ஒருவர் கூட கைது செய்யப்பட மாட்டார்கள் என்று கூறினார்கள். ஆனால், பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் கைதியாக இருக்க காரணமாக இருந்திருக்கிறார்கள்.

முதலமைச்சர் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்க கூடாது என்பதற்காக 576 கோடி ரூபாய் அளவிற்கு மீனவர்கள் நலன் காக்க திட்டங்களை அறிவித்துள்ளார் என்று கூறினார்.