அரசியல்

திமுக ஆட்சிக்கு 100க்கு 50 மதிப்பெண் வழங்கலாம் - பிரேமலதா விஜயகாந்த்

By Jayakumar
05 Aug 2025, 05:45 PM
சாதிவெறி தான் ஆணவக்கொலைகளுக்கு அடிப்படை காரணம்.ஒட்டுமொத்த மக்கள் மனநிலையே மாறினால் தான் இது மாறும் எனப் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக சார்பில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ எனும் பிரச்சாரப் பயணத்தைத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் உள்ளம் தேடி இல்லம் நாடி பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாகப் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள்குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

திமுகவுக்கு 50 சதவீதம் மதிப்பெண்

பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 4 ஆண்டுகளில் திமுகவின் ஆட்சி செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது குறித்த கேள்விக்கு, நிறையும், குறையும் உள்ள ஆட்சியாகத் தான் இதைப் பார்க்கிறோம். திமுக கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை எனும் குறை மக்களிடம் இருக்க தான் செய்கிறது. ஆணவக்கொலைகள், பாலியல் வன்கொடுமை, டாஸ்மாக், போதை கலச்சாரம் எனக் கேள்விகுறியாக இருக்கிறது.

தூய்மை விவகாரத்தில் ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளின் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது. திமுக கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. இருந்தாலும் அவர்கள் கொண்டு வந்திருக்கின்ற பல்வேறு திட்டங்கள் வரவேற்புக்குரியதாகவும் இருக்கிறது. அதனால் தான் நிறையும், குறையும் உள்ள ஆட்சி என்கிறேன். அதனால் திமுக ஆட்சிக்கு நூற்றுக்கு 50% மதிப்பெண் என்றார்.

தியாகிகளின் பெயரை வைக்கலாம்

உங்களுடன் ஸ்டாலின் என்கிற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்திரவிட்டும் பெயரைத் தமிழக அரசு பயன்படுத்துவது குறித்த கேள்விக்கு, மக்களின் வரிப்பணத்தில் நடத்துவது தான் அரசாங்க திட்டங்கள். இந்த அரசாங்க திட்டங்களில் வாழ்ந்து மறைந்த தலைவர்களின் பெயர்களையோ, தமிழ்நாட்டிற்காக வாழ்ந்து மறைந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்களையோ வைக்கலாம். இது போன்ற வரலாற்றில் இடம் பிடித்தவர்களின் பெயர்களை வைக்கலாம். ஆனால் அவர்களது ஆட்சி இருப்பதால் தான் அவர்களது பெயர்களை வைக்கிறார்கள். இது திமுக மட்டுமல்ல இதற்கு முன் ஆண்ட அதிமுக ஆட்சி காலத்திலும் தொடர்ந்தது. தற்போதுள்ள திமுக ஆட்சியிலும் தொடர்கிறது என்றார்.

தேதிமுகவை பொறுத்தவரை மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் திட்டங்கள் தனி நபர் பெயர்களை இல்லாமல் வாழ்ந்து மறைந்த தலைவர்களின் வைத்தால் வரவேற்புக்குரியது. வடமாநிலத்தவர் வாக்குரிமை குறித்த கேள்விக்கு, பதிலளித்து, பிறந்து வளர்ந்த மண்ணில் தான் அது இருக்க வேண்டும். இதனை மத்திய, மாநில அரசுகளும் தேர்தல் ஆணையமும் வரைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

தமிழகத்தில் சாதி வெறி

வேலூரில் CRPF வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு குறித்தான கேள்விக்கு, தமிழகம் முழுவதும் உயிருக்கு, உடைமைகளுக்கு, மீனவர்களுக்கு, வியாபாரிகளுக்கு, விவசாயிகளுக்குப் பாதுகாப்பு இல்லை. இந்த நிலை மாற வேண்டும். சட்டம்-ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்பு கரம் கொண்டு இதையெல்லாம் அடக்க வேண்டும்.

ஆணவக்கொலைகளுக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளுக்கு நிச்சியமாக ஆணவ சாதிவெறி தான் ஆணவக்கொலைகளுக்கு பேஸ், எத்தனை பெரியார், பாரதியார்கள் சொன்னாலும் தமிழகத்தில் சாதி வெறி இன்னும் மறையவில்லையென ஆதங்கப்பட்டார். சாதி வெறி ஒரு தனி நபருடைய விஷயமும், ஒரு ஆட்சியாளர் உடைய விஷயமா இல்லை. ஒட்டுமொத்த மக்கள் மனநிலையே மாறினால் தான் இது மாறும் என்றார்.

சவால்களைச் சந்திப்போம்

தேமுதிக 20 ஆண்டு காலங்களாக இருக்கிறது. இதனை எவ்வளவோ கேப்டன் பார்த்துவிட்டார். நான் செல்லும் இடமெல்லாம் மின்வெட்டை ஏற்படுத்துகிறார்கள்.இது தொடர்கிறது. இதனால் தான் நாங்கள் செல்லும் போதே வாகனங்களில் ஒளி விளக்குகள், மைக் செட் உள்ளிட்ட செட்டப்-களுடனே செல்கிறோம் எனத் தெரிவித்தார்.இதில் அரசியலில் இருக்க தான் செய்யும். இதெல்லாம் எதிர்நீச்சல் போட்டுச் சவால்களைச் சந்தித்து தான் தேமுதிக வளர்ந்திருக்கிறது.அதேபோல் சமாளிக்கும் திறமையும், சவாலை எதிர்கொள்கின்ற தைரியமும் தேமுதிக-விற்கு இருக்கிறது எனத் தெரிவித்தார்.