Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

அடிமை கட்சியா நாங்க? ED குறித்து துணை முதல்வர் உதயநிதி பேட்டி

By MUTHUKRISHNAN
24 May 2025, 06:14 PM
புதுக்கோட்டையில் நடைப்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற உதயநிதி, பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ED-க்கு மட்டுமல்ல.. மோடிக்கும் பயப்பட மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை நடைப்பெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அரசு அதிகாரிகள் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அதிகாரிகளிடம் மாவட்டத்தில் நடைப்பெற்று அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.

இதன்பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் அமலாக்கத்துறை நடவடிக்கை மற்றும் முதல்வரின் டெல்லி பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த உதயநிதி, ”நமது மாநிலத்திற்கான நிதியை கேட்டு பெறுவதற்காக நடைப்பெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு முதலமைச்சர் சென்றுள்ளார். எதிர்க்கட்சிகள் அரசியல் பண்ணுவதற்காகவே முதல்வரின் டெல்லி பயணத்தை விமர்சித்து வருகின்றனர்.”

”ED-க்கு (அமலாக்கத்துறை) மட்டுமல்ல.. மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். இதை தான் பலமுறை சொல்லிக்கொண்டு வருகிறேன். தொடர்ந்து மாநில உரிமைக்காக குரல் கொடுப்போம். மிரட்டி அடி பணிய வைக்க பார்த்தார்கள். பயப்படுவதற்கு தி.மு.க. ஒன்றும் அடிமை கட்சி கிடையாது. கலைஞர் உருவாக்குன கட்சி. சுயமரியாதை கட்சி. பெரியாரின் கொள்கைகள் உடைய கட்சி. தவறு செய்பவர்கள் தான் பயப்படணும். நாங்கள் யாருக்கும் அடிபணிய, பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக சந்திப்போம்” என்றார்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் தயாரிப்பாளர் ஆகாஷூக்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது துணை முதல்வரின் நெருங்கிய நண்பர் தான் ஆகாஷ் என்பதால் அரசியல் களத்தில் அமலாக்கத்துறையின் இந்த சோதனை சூடிபிடித்தது. எதிர்கட்சிகள் உதயநிதி மீது அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுப்பதற்காகவே முதல்வர் தற்போது டெல்லி சென்றுள்ளார் என குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வுக்கூட்டத்தினை தொடர்ந்து, நரிக்குறவ மக்களுக்கு வீட்டுமனை பட்டாவினை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புதுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்திலும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தொண்டர்கள் முன் உரையாற்றினார்.

திமுகவில் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டக்கழக அவைத்தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர், ஆவுடையார்கோயில் ஒன்றிய பெருந்தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவரும், மிசா நெருக்கடி நேரத்தில் சிறைகண்டவருமான மறைந்த பொன்பேத்தி மிசா இரா.துரை மாணிக்கம் அவரது திருவுருவப்படத்தையும் புதுக்கோட்டையில் இன்று திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார் உதயநிதி.