Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

வன்முறையைத் தூண்டும் கருத்து: வெளியான சில நிமிடங்களில் ஆதவ் அர்ஜுனா பதிவு நீக்கம்!

By Christon
30 Sep 2025, 07:33 AM
கரூர் சம்பவம் தொடர்பாக திமுக அரசை விமர்சித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. இருப்பினும் அந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக திமுக அரசை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட ஒரு 'எக்ஸ்' பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவசரமாக நீக்கப்பட்டது. இருப்பினும், இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி, அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதவ் அர்ஜுனாவின் பதிவு

கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டது மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா, திமுக அரசை விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது: "சாலையில் நடந்து சென்றாலே தடியடி... சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.... இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.

இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது.

பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்" என்று அவர் ஆவேசமாகக் குறிப்பிட்டிருந்தார்.

பதிவு நீக்கம்

கரூர் சம்பவத்தால் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பதிவு வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்து என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகள் வலுத்ததால், அவர் அந்தப் பதிவைச் சில நிமிடங்களிலேயே நீக்கிவிட்டார். இருப்பினும், அந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.

திமுக சார்பில் பதிலடி

ஆதவ் அர்ஜுனாவின் பதிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிலடி கொடுத்தார்.

சரவணன் அண்ணாதுரை வெளியிட்ட பதிவில், "அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கியிருக்கும் ஒரு கேடு கெட்ட ஊழல்வாதி, கூட்டத்தைக் காட்டி அரசியல் பேரம் செய்ய நினைத்து, ஒரு பேரிழப்பை, பெருந்துயரை உருவாக்கிக் காட்டிய ஆணவக் கூட்டத்தின் சூத்ரதாரி புரட்சி வெடிக்க வேண்டும் என்கிறான். புரட்சி என்றால் பணம் கொடுத்து 100 இன்புளுயன்சர்ஸ் மூலம் நிகழ்த்திக் காட்டிவிடலாம் என கனவு கண்டுக் கொண்டிருக்கிறாரா?" என்று கடுமையாகச் சாடினார்.