Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

கோவை பெண் கடத்தல் சம்பவம்: காவல்துறை அலட்சியமாக செயல்படுகிறது- அன்புமணி குற்றச்சாட்டு!

By Christon
07 Nov 2025, 04:20 PM
முதல்வர் ஸ்டாலின் வீர வசனம் பேசுவதால் யாருக்கும் பயன் இல்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பிய பாமக தலைவர் அன்புமணி, முதல்வர் ஸ்டாலின் வீர வசனம் பேசுவதால் யாருக்கும் பயன் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

காவல்துறைக்கு கண்டனம்

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கோவை இருகூர் பகுதியில் இளம் பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருப்பதும், அப்பெண் காருக்குள் இருந்தவாறு அலரும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதும் அதிர்ச்சியளிக்கின்றன. ஆனால், இந்த விஷயத்தில் அரசும், காவல்துறையும் தீவிரம் காட்டாமல் அலட்சியமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

புகார் அளித்தால் தான் நடவடிக்கையா?

பெண் கடத்தப்பட்டது தொடர்பான விவகாரத்தில் உண்மை நிலையை மக்களுக்குத் தெரிவிக்கவும், பெண் கடத்தப்பட்டிருந்தால் அவரை மீட்கவும் நடவடிக்கை வேண்டிய காவல்துறை, கோவையில் எந்த பெண்ணும் கட்டத்தப்பட்டதாக புகார்கள் வரவில்லை என்று பொறுப்பற்று பதில் கூறியுள்ளது. இருகூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை காரில் வந்த சிலர் கடத்திச் சென்றதைப் பார்த்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அது குறித்து காவல்துறைக்கும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இவ்வளவுக்குப் பிறகு புகார் வரவில்லை என்று காவல்துறை கூறியுள்ளது.

அப்படியானால், முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து தடுக்கப்பட வேண்டிய குற்றமாக இருந்தாலும் அது குறித்து எவரேனும் புகார் அளித்தால் தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? காவல்துறைக்கு பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில் செயல்பட்டு குற்றங்களைத் தடுக்க வேண்டிய கடமை காவல்துறைக்கு இல்லையா?

அடுத்தடுத்த சம்பவங்கள்

கோவையில் கடந்த 2 ஆம் தேதி இரவு தான் கல்லூரி மாணவி ஒருவரை மூன்று மனித மிருகங்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள்னர். அதனால் ஏற்பட்ட அச்சம் விலகுவதற்கு முன்பே தமிழகம் - கேரளம் எல்லையான வாளையார் பகுதியில் இளம்பெண்ணை மிரட்டி பணம், நகை பறித்ததாக கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. கோவையில் அடுத்தடுத்து நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மக்களிடம் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளன.

வீர வசனம் பேசும் முதல்வர்

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களோ, இந்த குற்றங்களைத் தடுக்க வேண்டிய பொறுப்பு தமக்கு இல்லை என்பதைப் போல, இன்னொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திமுகவை எந்தக் கொம்பனாலும் தொடக்கூட முடியாது என்று வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்.

திமுகவை யாரால் தொட முடியும்; திமுகவை யாரால் வீழ்த்த முடியும் என்பதெல்லாம் தேர்தலின் போது தீர்மானிக்கப்படும். இன்றைய சூழலில் பெண்கள் உள்பட தமிழக மக்கள் அனைவரும் அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். கோவையில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணுக்கு ஏதேனும் ஆபத்து நேருவதற்கு முன்பு அவரை மீட்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.