Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

அண்ணா பிறந்தநாள்: 1967-ல் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தை நிகழ்த்துவோம் என விஜய் உறுதி!

By Christon
15 Sep 2025, 10:41 AM
"1967-ல் நிகழ்ந்ததைப் போன்ற ஆட்சி மாற்றத்தை மீண்டும் கொண்டுவருவோம்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றி 1967-ல் நிகழ்ந்ததைப் போன்ற ஆட்சி மாற்றத்தை மீண்டும் கொண்டுவருவோம் என உறுதியளித்துள்ளார்.

அண்ணாவின் கொள்கைகளைப் போற்றி விஜய் பதிவு

விஜய் தனது பதிவில் கூறியிருப்பதாவது; "பேரறிஞர் அண்ணா, மாநில உரிமைக்காக ஓங்கி குரல் எழுப்பியவர், இருமொழிக் கொள்கையைத் தமிழகத்திற்குத் தந்தவர், தமிழ்நாடு என்று சட்டப்படி பெயர் மாற்றியவர், சமூக நீதியைக் கொள்கையாகக் கொண்டிருந்தவர், சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியவர், குடும்ப ஆதிக்கமற்ற அற்புதமான அரசியல் தலைவர், கொள்கை வழி நின்றவர், கனிவின் திருவுருவம்" என்று அண்ணாவின் சிறப்புகளைப் பட்டியலிட்டுள்ளார்.

அரசியல் உறுதிமொழி

தொடர்ந்து, "இரட்டை வேடம் போட்டுத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல், அவர்களுக்காக உண்மையாக உழைத்தவர். தேர்தல் அரசியலில் அசாத்திய வியூகத்தை வகுத்து, மாபெரும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கு வழிவகுத்த பேரறிஞரின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குவோம்.

'மக்களிடம் செல்' என்ற அவரது அரசியல் மந்திரத்தைப் பின்பற்றி, 1967 தேர்தல் அரசியல் வெற்றி விளைவை, ஆட்சி மாற்றத்தை மக்கள் ஆதரவுடன் மீண்டும் தமிழகத்தில் நிகழ்த்திக் காட்ட உறுதி ஏற்போம்" என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.