Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு செல்லும்.. இபிஎஸ்-க்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

By Christon
04 Sep 2025, 12:52 PM
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

வழக்கின் பின்னணி

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தேர்வை எதிர்த்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில், "அதிமுக விதிகளின்படி பொதுச்செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், அவரது தேர்வு செல்லாது என அறிவிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி அந்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இபிஎஸ் தரப்பு வாதம்

இந்த வழக்கு, நீதிபதி பி.பி. பாலாஜி முன் விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதாடுகையில், "சூரியமூர்த்தி 2018-ஆம் ஆண்டிலிருந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. மேலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து அவர் போட்டியிட்டார். எனவே, கட்சி விவகாரம் குறித்து வழக்கு தொடர அவருக்கு எந்த உரிமையும் இல்லை. இவற்றையெல்லாம் கவனிக்கத் தவறிய உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, சூரியமூர்த்தியின் வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்த உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார். மேலும், உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தொடர்ந்திருந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதன்மூலம், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது அதிகாரபூர்வமாக செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.