Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

அதிமுக தலைமையிலான கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்பட வாய்ப்பு: டிடிவி தினகரன்

By Christon
08 Dec 2025, 01:55 PM
தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட வாய்ப்பிருப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் ஒரு பலமான கூட்டணி அமைக்கப்பட்டால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட வாய்ப்புள்ளது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

திமுகவை வீழ்த்தும் சவால்

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், வரவிருக்கும் தமிழகத் தேர்தல் களம் குறித்துப் பேசினார். சில கட்சிகள் பிளவுபட்டிருப்பது மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகியிருப்பது குறித்து அவர் குறிப்பிட்டார். "தவெக என்ற புதிய வரவு வேறு இருக்கிறது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் இதையெல்லாம் சரிசெய்யவில்லை என்றால், திமுகவை வீழ்த்துவது கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன்," என்று அவர் தெரிவித்தார்.

தவெக தலைமையில் ஒரு பலமான கூட்டணி அமைந்தால், அது திமுக கூட்டணியை வீழ்த்துவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், திமுக கூட்டணிக்குப் போகிறேன் என்று இதற்கு அர்த்தமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆபத்து

வரும் தேர்தலில் நான்கு முனைப் போட்டி இருக்கும் என்ற தினகரன், சீமான் தனித்துப் போட்டியிடுவார் என்றும், திமுக கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, தவெக தலைமையில் ஒரு கூட்டணி எனப் போட்டி அமையும் என்றும் கூறினார். "தவெக தலைமையில் ஒரு பலமான கூட்டணி அமைய செங்கோட்டையன் உள்ளிட்டவர்கள் முயற்சி செய்வதை கேள்விப்படுகிறோம். அவ்வாறு தவெக தலைமையில் ஒரு பலமான கூட்டணி அமைந்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-வது இடத்திற்குத் தள்ளப்பட வாய்ப்பிருக்கிறது," என்று அவர் வெளிப்படையாகக் கூறினார். இது எடப்பாடி பழனிசாமி மீதான தனிப்பட்ட வருத்தத்தில் சொல்லப்படவில்லை என்றும், யதார்த்தத்தைச் சொல்கிறேன் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.