Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

+1 மாணவிக்கு பாலியல் தொல்லை..! தவெக நிர்வாகி மீது போக்சோ..! தட்டித் தூக்கிய போலீஸ்!

By VASUKI
04 Mar 2025, 03:36 PM
தமிழக வெற்றி கழகத்தின் நகரச் செயலாளர் ஒருவர் 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான ஒரு கொடூரச் செயலை செய்த அந்த நகரச் செயலாளர் யார்? அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாவட்ட ரீதியிலான பதவிகள் நிரப்பப்பட்டு வருகிறது. ஜனவரி மாத இறுதியிலேயே 5 கட்டங்களாக 95 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தவெக சார்பாக பல்வேறு புதிய அணிகள் உருவாக்கப்பட்டு, அதற்கான நியமனங்கள் நடந்து வருகின்றன.

இதற்கிடையில், என்னதான் பார்த்து பாத்து பொறுமையாக அனைத்தையும் செய்துவந்தாலும், பல சர்ச்சகள் தவெகவை சுற்றி நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. கட்சி பெயரை அறிவித்த அடுத்த நாளே, ஒற்றுப்பிழை இருப்பதாக கிளம்பிய சர்ச்சை, மாநாட்டில் கொள்கை தெளிவில்லாமல் விஜய் பேசியதாக எழுந்த விமர்சனம், வொர்க் ஃபரம் ஹோம் அரசியலை விஜய் செய்வதாக எழுந்த விமர்சனங்கள்,விழுப்புரம் மாவட்டத்தில் நகரச் செயலாளர் பதவிக்கே 15 லட்சம் ரூபாய் கேட்பதாக எழுந்த பிரச்சனை, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற சமத்துவ கொள்கையை கொண்ட தவெகவில் சாதி பார்த்து பதவி கொடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டு என தவெகவும் சர்ச்சைகளும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், போக்சோ சட்டத்தில் தவெக நிர்வாகி ஒருவர் கைதாகி இருக்கும் சம்பவம் பகீரை கிளப்பியுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தில் தருமபுரி மாவட்ட கடத்தூர் நகர செயலாளராக இருப்பவர் தான் சுதாகர். இவர் அதே பகுதியில் மளிகை கடையும் நடத்திவருகிறார். மேலும் இதே கடத்தூர் பகுதியின் அருகே வசிக்கும் 11ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிய இவர் பல நாட்களாக நோட்டமிட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், அந்த 11ஆம் வகுப்பு மாணவி இரவு நேரத்தில் வீட்டில் தனியாக படுத்து உறங்கியுள்ளார். இவருடைய பாட்டி வெளியில் படுத்திருந்திருக்கிறார்.

இந்நிலையில் இதனை கவனித்த சுதாகர் வீட்டிற்குள் நுழைந்து மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. சுதாகரின் இந்த செயலால் அதிர்ந்துபோன அந்த மாணவி,  பெண்களுக்கான இலவச புகார் எண் 1098ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தகவல் அறிந்ததும், அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி விசாரணை மேற்கொண்டு சுதாகரை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

ஏற்கனவே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நெல்லை சங்கரன்கோயிலில் தவெக நிர்வாகி அல்-அமீன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பை வெளியிட்டிருந்தது தவெக.  

இந்நிலையில், தவெக நிர்வாகிகளாக இருக்கும் சிலர் மீது அவ்வப்போது வரும் பாலியல் குற்றச்சாட்டுகளும், கைதுகளும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.