Kumudam News 24 X 7 AMP Article
அரசியல்

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்- பிரேமலதா வலியுறுத்தல்!

By Christon
16 Aug 2025, 04:50 PM
“தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
கரூர் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் பூத் கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார்.

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தூய்மைப் பணியாளர்களின் முக்கியமான கோரிக்கைகளான வேலை உறுதிப்படுத்துதல், சம்பள உயர்வு, தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது ஆகியவற்றுக்காகப் போராடினர்.
அவர்களின் கோரிக்கை குறித்து முதல்வர் எதுவும் சொல்லவில்லை. அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், அவர்களது பிரச்னை தீர்க்கப்படவில்லை. மாறாக, காலை உணவு, வீடு, கல்வி உதவித்தொகை போன்ற மேம்போக்கான திட்டங்களை மட்டுமே முதல்வர் அறிவித்துள்ளார். அவர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

'தாயுமானவர்' திட்டம்

தொடர்ந்து பேசிய அவர், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதல் தேர்தல் அறிக்கையில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வரும்என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு அனைத்துக் கட்சியினரும் கேலி கிண்டல் செய்தனர். வட மாநிலங்களில் இந்த திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது தமிழக முதல்வர் ‘தாயுமானவர்’ என்ற திட்டத்தின் மூலம் 70 வயது முதியோர்களுக்கு வீடு தேடி வாகனங்களில் சென்று ரேஷன் பொருட்கள் உபயோகிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்திற்கு நன்றி” என்று கூறினார்.

திமுக ஆட்சியில் நிறைகளும் குறைகளும் உள்ளது

திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், “தேமுதிக பொருத்தவரை திமுக ஆட்சியில் நிறைகளும், குறைகளுமாக உள்ளது. வரிகள் மட்டும் அரசு வசூலிக்கிறது. பணிகளை தனியார் மயமாக்குவது சரியா..?”

தேர்தல் வாக்குறுதிகளில் திமுக சிலவற்றை நிறைவேற்றினார்கள், பலவற்றை நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வரும் முன்னர் ஒரு நிலைபாடு, வந்த பிறகு ஒரு நிலைபாடு. இது மத்தியிலும், மாநிலத்திலும் இதேநிலைதான் நீடிக்கிறது” என்றார்.