Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை...மத்திய அரசு உத்தரவு

By Jayakumar
05 May 2025, 08:48 PM
பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திய சூழலில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 13 நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்தார்.இதைத்தொடர்ந்து வாகா எல்லை மூடல், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

போர்க்கால ஒத்திகை

இந்த நிலையில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 2 பேரை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். அப்போது ஆற்றில் குதித்து தப்பிய இளைஞர் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பயங்கரவாதிகள் சென்னை வழியாக இலங்கைக்கு தப்பிப்பதற்கான வாய்ப்புள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து நேற்று இலங்கையில் அதிகாரிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்சில் சோதனை நடத்தினர்.

பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால், இரு நாடுகளும் எல்லை பகுதிகளில் ராணுவத்தினரை குவித்துள்ளனர்.இந்த நிலையில், நாடு முழுவதும் மே 7ம் தேதி அனைத்து மாநில அரசுகளும் போர்க்கால ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாக். இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உத்தரவு பிறப்பிப்பு

பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திய சூழலில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் இன்னும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.