இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

By Christon
27 Jul 2026, 11:58 AM
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் தொடர்ந்து இரண்டாவது வாரத்தின் முதல் நாளும் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை ஆகியவற்றை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து இரண்டாவது வாரத்தின் முதல் நாளான இன்றும் முடங்கின.

கடந்த வாரம் முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இச்சூழலில், மாணவர்களின் போராட்டத்திற்குத் தீர்வாகக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த 25 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதன் தொடர்ச்சியாக, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட அரசுத் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்ய உள்ளது.

இரண்டாவது வாரத்தின் முதல் நாளான இன்று காலை அவைகள் கூடியதும், காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) போராட்டத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் இரு அவைகளிலும் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால், பகல் 12 மணி வரை இரு அவைகளின் நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டன.