Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

திரும்பத் திரும்பக் கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் சிறை - உ.பி. அரசின் அதிரடி உத்தரவு!

By VASUKI
16 Sep 2025, 09:02 PM
பொதுமக்களை திரும்பத் திரும்ப கடிக்கும் தெரு நாய்களை ஆயுள் முழுவதும் காப்பகங்களில் அடைக்க உத்திரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களுக்குத் திரும்பத் திரும்பத் தொல்லை கொடுத்து, கடிக்கும் தெரு நாய்களை ஆயுள் முழுவதும் விலங்கு காப்பகங்களில் அடைக்க உத்தரப் பிரதேச அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மனிதர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநில அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை, சமூக ஆர்வலர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் தெரு நாய்கள் கடித்து பலர் உயிரிழந்த, காயமடைந்த சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தக் கடுமையான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்களைத் தாக்கும் நாய்களை அடையாளம் கண்டு, அவற்றை உடனடியாகப் பிடித்து, ஆயுள் முழுவதும் விலங்கு காப்பகங்களில் வைத்துப் பராமரிக்க வேண்டும் என மாநில அரசு நகராட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தெருக்களில் உலவும் நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், அவற்றால் ஏற்படும் தாக்குதல்களைத் தடுக்கவும் உதவும் என நம்பப்படுகிறது.

இந்த உத்தரவில், ஒரு குறிப்பிட்ட நிபந்தனையும் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்த நாய்களை வளர்க்க விரும்பும் நபர்கள், மீண்டும் அவற்றைச் சாலையிலோ அல்லது பொது இடங்களிலோ விடமாட்டோம் எனச் சட்டப்பூர்வமான பிரமாண பத்திரம் (affidavit) அளித்தால், அவற்றை வளர்க்க அனுமதி வழங்கப்படும். இந்த விதிமுறை, பொறுப்பற்ற முறையில் நாய்களை வளர்த்துவிட்டு பின்னர் அவற்றைத் தெருவில் விடும் செயலைத் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய சட்டம், விலங்குகள் நலன் மற்றும் மனித பாதுகாப்பு ஆகிய இரு தரப்புக்கும் ஒரு சமநிலையை ஏற்படுத்தும் முயற்சியெனப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.