Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு.. பயணிகள் கடும் அவதி!

By Christon
05 Oct 2025, 04:39 PM
அமிர்தசரஸில் இருந்து பிரிட்டன் பர்மிங்காம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து பிரிட்டன் பர்மிங்காமுக்கு நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ரக விமானம் ஒன்று, நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

பாதுகாப்பான தரையிறக்கம்

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, விமானத்தில் இருந்த ரேம் ஏர் டர்பைன் (RAT) என்ற அவசர கருவியைப் பயன்படுத்தி அந்த விமானம் பர்மிங்காம் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இந்தச் செயல்பாட்டினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விமானம் ரத்து; பயணிகள் அவதி

இந்தக் கோளாறு காரணமாக, பர்மிங்காமில் இருந்து டெல்லி செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்களுக்கு மாற்றுப் பயண ஏற்பாடுகளை விமான நிறுவனம் செய்து கொடுத்ததுடன், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தமும் தெரிவித்துள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்யும் பணியில் நிபுணர்கள் குழு ஈடுபட்டுள்ளது. சமீபகாலமாக ஏர் இந்தியா விமானங்களில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு வருவது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.