இந்தியா

சினிமா பாடல் பாடிய வட்டாட்சியர் சஸ்பெண்ட்.. வைரல் வீடியோவால் ஏற்பட்ட சிக்கல்!

By Christon
17 Aug 2025, 07:10 PM
பிரிவு உபசார விழாவில் சினிமா பாடல் பாடிய வட்டாட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் பணி மாறுதல் பெற்ற வட்டாட்சியர் ஒருவர், தனது பிரிவு உபசார நிகழ்ச்சி விழாவில் சினிமா பாடல் பாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது, அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குள்ளான வீடியோ

நான்டெட் மாவட்டத்தில் உள்ள உம்ரி பகுதியில் வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த பிரசாந்த் தோராட், அருகில் உள்ள லாத்தூர் மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். இதனால், அவருக்கு உம்ரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் 8 அன்று சக ஊழியர்களால் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.

அப்போது, தனது அதிகாரபூர்வ நாற்காலியில் அமர்ந்தபடி, 1981-ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'யாரானா' திரைப்படத்தின் புகழ்பெற்ற 'யாரா தேரி யாரி கோ' என்ற பாடலை பிரசாந்த் தோராட் உணர்ச்சிபூர்வமாகப் பாடியுள்ளார். சுற்றியிருந்த ஊழியர்களும் கைதட்டி உற்சாகப்படுத்தினர். இந்த நிகழ்வை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய, அது வேகமாக பரவி சர்ச்சைக்குள்ளானது.

வட்டாச்சியர் மீது நடவடிக்கை

சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவுக்குப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். பொறுப்புள்ள அரசுப் பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி நடந்துகொள்வது முறையற்றது மற்றும் கேலிக்குரியது என விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து நான்டெட் மாவட்ட ஆட்சியர் உயர் அதிகாரிகளுக்கு விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதில், தோராட்டின் இந்தச் செயல்பாடு அரசு நிர்வாகத்தின் பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகவும், 'மகாராஷ்டிரா சிவில் சர்வீசஸ் விதிகள், 1979'-ஐ மீறியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள வருவாய் ஆணையர் ஜிதேந்திர பபால்கர், வட்டாட்சியர் பிரசாந்த் தோராட்டை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பரவியதால், ஒரு அரசு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்தச் சம்பவம், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.