இந்தியா

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உஷார் நிலை!

By Christon
26 Aug 2026, 07:22 PM
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் எல்லையோர மாநிலங்களான பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 105 இந்தியர்கள் உட்படப் பலர் மாயமாகியுள்ளனர். திபெத் பகுதியிலிருந்து பாய்ந்து வந்த இந்த வெள்ள நீரால் நேபாளத்தின் பல கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதம் அடைந்துள்ளன. நேபாளத்திலிருந்து பாயும் கண்டக் மற்றும் கோசி ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால், அதை ஒட்டியுள்ள இந்தியப் பகுதிகளான பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சூழ்நிலையைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கத் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி தலைமையிலான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகப் பீகார் முதல்வர் சாம்ராட் சௌதரி தெரிவித்துள்ளார். நிலைமையைக் கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பீகார் முதல்வரைத் தொடர்புகொண்டு மாநில அரசின் தயார்நிலை குறித்துக் கேட்டறிந்துள்ளார்.

ஆற்றோரப் பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தேவையின்றி ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என்றும், வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டும் பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பேரழிவு மேலாண்மைத் துறை மற்றும் சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கண்டக் மற்றும் நாராயணி ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் ஆகிய எல்லை மாவட்டங்கள் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள உள்ளூர் நிர்வாகங்கள் முழு வீச்சில் தயாராக இருக்க வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

நேபாள சுற்றுலா வாரியத்தின் தகவல்படி, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் 105 இந்தியர்கள் உட்பட 291 வெளிநாட்டினரும், 93 நேபாள நாட்டினரும் காணாமல் போயுள்ளனர். மேலும், தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த நேபாளத்தைச் சேர்ந்த 33 பாதுகாப்புப் படை வீரர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.