இந்தியா

டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாடு.. அரசு எடுத்த அதிரடி முடிவு

By Kumudam News
19 Nov 2024, 06:01 AM
காற்று மாசுபாடு காரணமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்கள் மூச்சு திணறல், சுவாசக்கோளாறு, நெஞ்சு எரிச்சல், கண் எரிச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 ஒவ்வொரு ஆண்டும் காற்றுமாசுபாடு காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், புற்றுநோயை உண்டாக்கும் மாசுகள் காற்றில் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

டெல்லியில் காற்றின் தரம் அபாயகர அளவான 980 எட்டியுள்ளதாகவும் இது சாதாரண அளவை காட்டிலும் 65 சதவீதம் அதிகம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், குழந்தைகள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்று மாசுபாடு குறித்து  பொதுமக்கள் கூறியதாவது:-  அமைச்சர்களும், அதிகாரிகளும் வெளியில் வரமால் வீட்டிற்குள் இருப்பார்கள், ஏழை மக்கள் நாங்கள் என்ன செய்யமுடியும். அதேபோன்று செல்வந்தர்கள் வாங்கும் காற்றை சுத்தப்படுத்தும் உபகரணத்தை மாதாந்திர கட்டணத்தை செலுத்த தவிக்கும் எங்களால் எப்படி வாங்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.